எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்
ஒரு பரிசு
உயிரும் குரதியுமாகியது
இதில் கவலைக்கோ வெட்கத்திற்கோ
இடமில்லை என்றார்கள்
என்றபோதும்
நம் நிழலைக்காணுகையில்
அச்சமாயிருக்கிறது
நான் கண்டேன்
உனது நிழலிலிருந்து குரதி பீறிடுவதை
எனது நிழலிலிருந்து
நெருப்பு சுவாலை விடுவதை
ஒரு வாழையிலையில்
நமது முகங்கள் படைக்கப்பட்டிருந்தன
நமது விருந்திற்காகவே
எனது புன்னகையை நீ தின்றாய்
உனது சிரிப்பொலியை நான் குடித்தேன்
பலியாட்டின் மணியொலி
விருந்தை முடித்து வைத்தது
நீ விடைபெற்றபோது
விடுவித்த கையில் பார்த்தாயா
காயாத குருதியின்
அச்சமூட்டும் அழகிய கண்களை
பலியாடு அந்தக்கண்களிலிலிருந்து
நழுவிப்போய்க்கொண்டிருந்ததை
நாம் கவனிக்கவில்லை
என்பது இப்போது
ஞாபகமிருக்கிறது
No comments:
Post a Comment