Sunday, June 17, 2007

பலியாட்டின் கண்கள்

எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்

ஒரு பரிசு

உயிரும் குரதியுமாகியது

இதில் கவலைக்கோ வெட்கத்திற்கோ

இடமில்லை என்றார்கள்

என்றபோதும்

நம் நிழலைக்காணுகையில்

அச்சமாயிருக்கிறது



நான் கண்டேன்

உனது நிழலிலிருந்து குரதி பீறிடுவதை

எனது நிழலிலிருந்து

நெருப்பு சுவாலை விடுவதை



ஒரு வாழையிலையில்

நமது முகங்கள் படைக்கப்பட்டிருந்தன

நமது விருந்திற்காகவே



எனது புன்னகையை நீ தின்றாய்

உனது சிரிப்பொலியை நான் குடித்தேன்



பலியாட்டின் மணியொலி

விருந்தை முடித்து வைத்தது

நீ விடைபெற்றபோது

விடுவித்த கையில் பார்த்தாயா

காயாத குருதியின்

அச்சமூட்டும் அழகிய கண்களை



பலியாடு அந்தக்கண்களிலிலிருந்து

நழுவிப்போய்க்கொண்டிருந்ததை

நாம் கவனிக்கவில்லை

என்பது இப்போது

ஞாபகமிருக்கிறது

No comments: