
00
கடந்த வாரத்தில் மகிழ்ச்சியான விசயம், கொழும்பில் ‘பாடிப்பறை’ நிகழ்ச்சியில் இளைய நண்பர்களைச் சந்தித்தது. ஆச்சரியமும் நம்பிக்கையும் தருகிற விதத்தில் துடிப்பாக இயங்கும் இளைஞர்கள். ‘சமூக விஞ்ஞானக் கற்கை வட்ட’த்தைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரங்களிலும் முக்கிய கருப்பொருளில் பலரையும் அழைத்துக் கலந்துரையாடல்களையும் நடத்துகிறார்கள். ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் ‘பாடிப்பறை’ என்ற கவிதைத்துறை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
பாடிப்பறையில் ‘கவிதைகளை வாசிப்பது, கவிதைகளை விமர்சனம் செய்வது, கவிதைப் போக்குகளைப் பற்றி ஆராய்வது, கவிஞர்களை நினைவு கொள்வது அல்லது அவர்களுடைய கவிதைகளையும் அவர்களையும் மதிப்பீடு செய்வது என கவிதை சார்ந்ததாகவே நடக்கிறது ‘பாடிப்பறை’.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி இணைத்தளத்தில் பார்த்த நண்பர் பௌசர், ‘அது என்ன பாடிப்பறை?’ என்று கேட்டார்.
‘பாடிப் பறைதல். கவிதைகளைப் பாடி, கவிதைகளைப் பற்றிப் பறைதல்’ என்று சொன்னேன்.
ஆனால், ஆண்டாள் கவிதையில் பாடிப்பறை என்று இதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார், பாடிப்பறை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மு. மயூரன். இந்தப் பெயரைத் தெரிந்தது விமலாதித்தன். விமலாதித்தனால், ஆழிமழை, பாடிப்பறை என இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டு, சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத் தோழர்களின் வாக்கெடுப்பில் ‘பாடிப்பறை’ என்ற தலைப்புத் தெரிவு செய்யப்பட்டது. பாட்டின் (கவியின்) மூலம் சமூகத்துக்குச் செய்தியைப் பறைதல் என்ற அர்த்தம் தோழர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
‘பாடிப்பறை’ நிகழ்ச்சிக்கான கருத்தாக்கத்தை உருவாக்கியவரும் அந்த நிகழ்ச்சியையும் அதற்கான அழைப்பிதழ்களையும் வடிவமைப்பவரும் விமலாதித்தன்தான். சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு இது. எப்பொழுதும் மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடிருப்பது விமலாதித்தனின் அடையாளம்.
நிகழ்ச்சிக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்து அழைத்துக் கலந்து கொள்ள வைக்கிறார்கள்.
10.12.2011 அன்று, கவிஞர் சு.வில்வரத்தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவையொட்டி, அவரை நினைவு கூர்வதாகவும் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்த நிகழ்வைப் ‘பாடிப்பறை’யில் ஒழுங்கு படுத்தியிருந்தனர்.
இதன்படி, ‘சு.வியைக் கண்டடைதல்’ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக என்னை அழைத்திருந்தனர். மேடைப் பேச்சில் முதல் வரிசைக்குப் போக முடியாத ஆள் நான். (இடைவரிசையிற்கூட உன்னுடைய இடம் சந்தேகமே என்பார்கள் நண்பர்கள்) இதை வலியுறுத்திச் சொன்னபோதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. நானே சு.வியைப் பற்றிப் பேசவேண்டியதாயிற்று. சு.வியுடன் நட்பாக இருந்தவர்களில் ஒருவன் என்பதால், அவரைப் பற்றிப் பேசுவது, அவருடைய நினைவுகளைப் பொது அரங்கொன்றில் மீட்பது அவருக்கான மதிப்பைப் பேணுவதாகும் என்று நினைத்துச் சம்மதித்தேன்.
நிகழ்ச்சிக்காகப் போனபோது, அதிகாலையில், நண்பர் மு. மயூரன் வரவேற்றுத் தன்னுடைய அறைக்குக் கூட்டிச் சென்றார். புத்தகங்களும் இசைக்கருவிகளும் கணினியும் நிரம்பியிருந்த அறையில் இன்னொரு விசயமும் இருந்தது, ஒழுங்கு.
மு. மயூரன் கணிப்பொறித்துறையில் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். கணிப்பொறி தொடக்கம், இணைய அரசியல், சமூக அரசியல், மாற்றுச் சிந்தனை, பண்பாடு எனப் பலவற்றைப் பற்றியும் அறிவுபூர்மாக உரையாடக் கூடியவர். ஆனால், மிக எளிமையான விளக்கங்கள். நல்ல வாசிப்பாளர். இளைய தலைமுறையில் ஆச்சரியங்கொள்ள வைக்கும் அணியில் முக்கியமானவர். நான் பார்த்த, பழகிய இளைஞர்களில் ஆழமாகவும் சமூக அக்கறையுடனும் விசயங்களைப் பார்க்கும் ஒருவர். மட்டுமல்ல, செயற்பாட்டாளர். பாடிப்பறை, சமூக விஞ்ஞான வட்டம் போன்றவற்றை மயூனைப்போன்ற – அவருடைய நண்பர்களே இயக்கி வருகிறார்கள்.
பேசிக்கொண்டே நிகழ்ச்சிக்குத் தயாரானோம். நிகழ்ச்சிக்கான ஒலி அமைப்புக்கான ஏற்பாட்டைத் தானே கவனிக்க வேண்டும் என்பதால், வேளையோடு செல்ல வேண்டும் என்றார் மு. மயூரன.; ஒலிபெருக்கி வசதிகளைச் செய்வதற்கான கருவி மயூரனின் பொறுப்பிலிருந்தாலும் ஒலி ஒழுங்குகளுக்கும் இணைய வழியான வலைபரப்புக்கும் பொறுப்பானவர் தி. அனோஜன். அவரே வழமையாக அந்த வேலைகளைக் கவனிப்பவர். ஏறக்குறைய 20 வயதுக்கு மேலாகவோ கீழாகவோ ஒன்றிரண்டு வயதுடைய பருவம். ஆனால், இந்தத் துறையில் கெட்டிக்காரர். அன்று காலையில் அனோஜனுக்கு தவிர்க்க முடியாத வேறு பணிகள் இருந்தால், மயூரனே அந்தப் பணிகளை வேளையோடு சென்று சரிபார்க்க வேண்டியிருந்தது.
ஆகவே புறப்பட்டோம்.
‘பாடிப்பறை’ யைப் பற்றி இணையத்தின் வழியாக அறிந்த நளாயினி தாமரைச்செல்வன் என்பவர் இந்தச் சாதனத்தை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். அது பாடிப்பறை வட்டத்தினருக்கு மிகப் பெரிய உற்சாகத்தையும் பயனையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு நாட்களும் ஒலி அமைப்புக்காக பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்கள். ஆகவே, அந்தச் சாதனத்தை எடுத்துச் சென்றோம்.
நாங்கள் ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’க்குச் சென்றபோது, அங்கே ரெஷாங்கன் தயாபரன் வரவேற்றார்.
பாடிப்பறையின் தொடர்பாளரும், ஒழுங்கு படுத்துனரும் ரொஷாங்கன்தான். மிக உற்சாகமானவர். என்னை இந்த நிகழ்ச்சிக்கு தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வரவைத்தவர் இவரே. இப்போதுதான் ரொஷாங்கனை நேரிற் பார்க்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து, ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகிய நண்பர்கள் சிலரும் அங்கே இருந்தனர். முக்கியமாக, தனுஜன் நிகழ்வுக்கான அடிப்படை ஒழுங்குகளைச்செய்து கொண்டிருந்தார். மிகப் பொறுப்பான பேர்வழி. இவருடன் நான் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகியிருந்தேன். இவரே, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவோரை உபசரிப்பதில் முக்கிய பொறுப்பேற்கும் ஆள்.
துடிப்பான இளைஞர்கள் எப்பொழுதும் ஈர்ப்பைத் தருவர். அதிலும் பொது விசயங்களில் அவர்கள் முனைப்பாக இருந்தால், இந்த ஈர்ப்பு இன்னும் அதிகம். அதிலும் அவர்கள், அறிவார்ந்த விசயங்களில் ஆர்வத்தோடிருந்தால் இந்த ஈர்ப்பில் எல்லை பெரும்பரப்புக்கு விரிந்து விடும். அவர்கள் அறிவாளிகளாகவே இருந்து விட்டால், அதைச் சொல்லவே தேவையில்லை@ எதிர்காலம் குறித்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்கும் இடம் இதுதான்.
இந்த விசயத்தில் நான் கொடுத்து வைத்த பேர்வழி என்றே சொல்லவேணும். என்னுடைய வாழ்க்கை முழுதும் நான் இளைஞர்களுடன் இடையறாது பழகக் கிடைத்திருக்கிறது. அப்படிப் பழகும் வாய்ப்பு அதிகமுள்ள துறையும் தொழிலும் எனக்கு வாய்த்தது மகிழ்ச்சி. இலக்கியமும் ஊடகத்துறையும் இளைய தலைமுறையுடன் பழகுவதற்கான – அவர்களுடன் சேர்ந்தியங்குவதற்கான களவெளியை அதிகமாகக் கொண்டவை. அதிக சாத்தியங்களையும் உடையவை.
இளைய தலைமுறையினரோடு பழகும்போது அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? என்ன செய்ய விரும்புகிறார்கள்? அவற்றை எப்படிச் செய்கிறார்கள்? எங்களுடைய இளைமைப்பிராயத்திலிருந்து அவர்கள் என்ன விதமாகவெல்லாம் வேறுபடுகிறார்கள்? எதைச் சேகரமாக்குகிறார்கள்? என்ற விசயமெல்லாம் தெரியவரும்.
எண்ண ஓட்டங்கள் தலைமுறைக்குத் தலைமுறை வேறுபடுகிறது. அனுபவங்களும் அறிவும் வேறுபடுகிறது. கூர்ப்பின் விதி புதிய தலைமுறையை மேலும் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அதைத் தொடர்ந்து அவர்கள் பயணிக்கிறார்கள். ஒரு புதிய செய்மதியின் ஆய்வியக்கத்தைப் ஆர்வத்தோடு பார்ப்பது போன்ற ஒரு ஈர்ப்பு இது.
இந்த இளைஞர்கள், சமூக விடுதலையைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கிறார்கள். இலங்கையின் இனச்சிக்கல், பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் இயக்கங்களின் போக்குகள், மக்களின் நிலை, சர்வதேச அரசியல் மற்றும் அறிவியல் செல்வழிகள், தொழிநுட்பத்தின் விரிவாக்கம், கலை, இலக்கியம் பண்பாடு போன்ற தளங்களின் செயற்பாடுகள், அவற்றை எவ்வாறு மக்களுக்கான பண்பாடாக இயக்கமுற வைக்க வேண்டும் என்ற சிந்தனை என்றவாறாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றுக்கான அடித்தளமாகவே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் மூலமாக கருத்தமர்வுகளையும் கலந்துரையாடல்களையும் நடத்துகின்றனர். இந்த அமர்வில் கலந்து கொள்வது நல்லது, நிச்சமாக வாருங்கள் என்று தெரிவித்திருக்கும் அழைப்பைப் பார்க்கிற போதும் அதில் கலந்து கொள்ள முடியாதிருப்பது இழப்பே. நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கும் நாங்கள் இருக்கும் இடத்துக்கும் இடையிலான தூரமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்குக் காரணம்.
பாடிப்பறை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மயூரன் சில விளக்கங்களைச் சொன்னார்.
‘பாடிப்பறை’ என்பது, சமூக விஞ்ஞான வட்டத்தின் கவித்துறை சார்ந்த நிகழ்வாகும். கவிதை இலக்கியம் என்பதை வெறுமனே நயப்புக்கும் விருதுகளுக்கும் உரியதாக மட்டும் பார்க்காமல், அதன் கலைப் பெறுமதியோடு சேர்த்து, அதன் சமூக அரசில் பெறுமதிகளை உணர்ந்து கொண்டு மக்களது விடுதலைக்கான கருவியாகவும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதையாகவும் நாம் பார்க்க விரும்புகிறோம். அந்த வகையில், சமூக விஞ்ஞான வட்டமானது கற்றல், கற்பித்தல் என்பதைத் தாண்டி, சமூகத்தில் இறங்கி சமூக அசைவியக்கங்களில் பங்கு பற்ற விரும்பும் ஓர் அமைப்பாக இருக்கிறது.
மு.தளையசிங்கத்தின் மருமகளும் சு.வியின் துணைவியாரின் தங்கையும் இங்கே வந்திருக்க, தளையசிங்கத்தின் முகாமில் உருவாகி வளர்ந்த சு.வியின் உறவினர்கள் கலந்து கொள்ள, தேசிய கலை, இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில், ஒரு புதிய இளந்தலைமுறையினரான சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தினரால், அந்தக் கவிஞனின் நினைவாக, ஒரு நிகழ்வு நடக்கும் இத்தருணம், பல வழிகளில் முக்கித்துவம் உடையதாகும்.
இருக்கவே செய்கின்ற அரசியல், கருத்து நிலை வேறுபாடுகளுக்கும் அப்பால், போற்ற வேண்டிய – உற்சாகப் படுத்தப்பட வேண்டிய கூறுகளைப் போற்றுவதும் உற்சாகப்படுத்துவதும் எமது கடமையென்றே நாம் கருதுகிறோம்’ என்றார் மு.மயூரன்.
மாறியிருக்கின்ற இலங்கையின் அரசியல் நிலவரங்களின் பின்னணியில், எல்லோருக்கும் கிடைத்திருக்கின்ற புதிய வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய ஒரு சிந்தனையும் அதை முன்மாதிரியாக்கும் செயற்பாடும் வரவேற்கத்தக்கதே. புதிய சிந்தனைகளுக்கும் அனுபவங்களின் வழியாகக் கண்ட உண்மைகளுக்கும் மதிப்பளிக்கும் எந்தச் செயலும் பெறுமதியானது.
தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவிதைகளை நல்ல முறையில் வாசித்தளித்தனர். அதிகமாகச் சு.வியின் கவிதைகள்.
திரு. சோ.முரளி சு.வியின் "யாருடைய கால்கள்" எனும் கவிதை மீதான நயவுரையைச் செய்தபின்னர், சு.வியின் "விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்" எனும் கவிதையை, கவிஞர் சடாகோபன் வாசித்தார்.
கவிஞர் ஒட்டோ ரெனெ கஸ்ட்டிலோ அவர்கள் எழுதிய ஸ்பானிய மொழிக்கவிதையின் தமிழ்மொழிபெயர்ப்பான, "அரசியல் சாராப் புத்திஜீவிகள்" திரு.மிதுன் ராகுல் அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து ந.காண்டிபன் தலைமையில், சு. வில்வரத்தினத்தின் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்புகளிலான கவிதைகளைக் கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. "மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்" எனும் தலைப்பில் செல்வி.ரா.வைஷ்ணவியும் நீண்டெரிந்த கோடையில் எனும் தலைப்பில் திரு.பவித்திரனும், "உயிர்த்தெழும் காலத்திற்காக" எனும் தலைப்பில் திரு. மார்க்ஸ் பிரபாகர் அவர்களும் தத்தம் கவிதைகளை வெளிப்படுத்தினர்.
சு.வியைப் பற்றிய நினைவுரையை அடுத்து, கவிஞர் சி. சிவசேகரம், டொமினிக் ஜீவா, சோ.தேவராஜா உட்பட வேறும் சிலர் கருத்துரைத்தனர். (மன்னிக்கவும் அதில் இருவர் முக்கியமானவர்கள் - அவர்களின் பெயர்களை மறந்து விட்டேன்).
சு.வியின் சமனிலையை மையப்படுத்தியே எல்லோருடைய பேச்சுகளும் இருந்தன. குறிப்பாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சு.வியின் எதிர்வினைகளும் நிலைப்பாடுகளும் அவரை ஒரு சமனிலையாளராக அடையாளம் காட்டுகின்றன என்று சொன்னார்கள். அவர் தமிழ்த்தேசியவாதியாக இருந்தபோதும் ஒடுங்கிய ஒற்றைப் பரிமாணத்துடன் தன்னை வைத்துக்கொள்ளாமையே சு.வியின் சிறப்பு என்பதை பொதுவாக எல்லோருமே வலியுறுத்தினர். சு.வியின் கவிதைகளில் காணப்பட்ட குறுந்தேசியப் பண்பைச் சுட்டிக்காட்டி 80 களில் தான் எழுதிய விமர்சனத்தைச் சுட்டிக்காட்டினார் கவிஞர் சி. சிவசேகரம்.
நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு அம்சம், சு.வியின் உறவினர்கள் வந்திருந்தமை. அதிலும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான திரு. சு. கருணாகரன் சு.வியைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். சு.வியின் உருவாக்கத்தில் அவருடைய தாயார் அடிப்படையாக இருந்ததைப்பற்றி அவர் சொன்னார். மேலும், சு.வி சார்ந்திருந்த சர்வமத ஆசிரமம், மு.த ஆகிய தரப்பின் பங்களிப்புகளைப் பற்றியும் அவர் கூறினார். சு.வியின் சகி, மேகலா கண்ணில் சிகிக்சை செய்திருந்த காரணத்தினால், நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் உறவினர்களை அனுப்பிவைத்திருந்தார். அந்த நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டிய ஒருவர், மு.பொ. ஆனால், அவர் வரவில்லை.
தவிர, நீண்ட காலத்துக்குப் பிறகு, நண்பர்கள் கேதாரநாதன், மாவை நித்தியானந்தன், சி.கா. செந்தில்வேல், அந்தனி ஜீவா போன்றோரைச் சந்திக்கக் கிடைத்தது.
மேலும் சிலரைக் குறிப்பிட வேண்டும். மாளவிகா. நுpகழ்ச்சியை ஒழுங்காக – அமைதியோடு சிறப்புறத் தொகுத்து வழங்கினார். சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் உற்சாகமான உறுப்பினர் இவர் என அறிமுகப்படுத்தினார்கள்.
இன்னொருவர் மௌ. மதுவர்மன். இந்தக் கற்கை வட்டத்தின் பின்னணியில் நினறு தொடர்ச்சியாக நீண்டகாலமாக இயங்கி வருகிறார். மேலிரிந்த கீழான அமைப்பொழுங்க இல்லாத இவ்வட்டத்தின் கட்டுக்கோப்பினைத் தொடர்ச்சியாக காத்துவருபவர்களில் இவர் ஒருவர் என்றார்கள்.
இந்த நிகழ்வு எனக்கு இரண்டு விசயங்களில் மகிழ்ச்சியைத் தந்தது. ஒன்று சு.வியைப்பற்றிக் கதைத்தது. மற்றது, இளைய நண்பர்கள் பலரின் புதிய தொடர்பும் உறவும். மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையும் பொங்கிய இளைய முகங்கள்.
இப்படி ஆற்றல் மிக்க ஆயிரக்கணக்கான இளையோரைத்தானே சுதந்திர இலங்கை தின்று பசியாறியிருக்கு? எண்பதுகளில் இப்படித்தானே நாங்கள் நெஞ்சு நிரம்பிய கனவுகளுடன் ஊர்கள்தோறும் திரிந்து... சனங்களிடையே இறங்கினோம்.
ஆனால், இந்த இளைய தலைமுறை எல்லாவற்றையும் தன்னுள் நிதானப்படுத்துகிறது. ஏனென்றால், இது நெருப்புக்குள்ளே முளைத்து, இரத்தத்தில் வளர்ந்த பயிர்களல்லவா!
மறுநாள், விடைபெற்று வரும்போது மு.மயூரன் ஒரு பரிசைத் தந்திருந்தார் - ‘காலம் மாறுது’ என்ற பாடல் இறுவெட்டு அது. மலையக நிலைவரத்தைப் பற்றிய அருமையான வெளிப்பாட்டைக் கொண்ட பாடல்கள். உண்மையிலேயே அது பெரும் பரிசுதான்.
மறக்கவே முடியாத எதுவும் ஏதோவகையில் பரிசாகத்தான் இருக்கிறது.
00