எதுவெனச் சொல்ல முடியவில்லை
ஒரு சொல்
ஒரு போது மகிழ்ச்சியாக இருந்ததையும்
பின்னொரு போதில் துக்கமாக மாறியதையும்
மடியூறும் அன்பின் சுரப்பாக இருந்த
அச்சொல்
ஓர் நாள் பாலையில் கைவிட்டுச் சென்றதையும்.
02
காதல்-
மலராகவும் முள்ளாகவும் மாறும்
வித்தையும் விநோதமும் கொண்டதொரு வஸ்துவா, சொல்லா,
சொல்லடி மக்தலோனா?
03
என்னவென்று சொல்ல
ஒரு சொல்லுக்கும் அப்பால்,
செயல்களும் விளைவுகளும் நிகழ்த்தும் உணர்தலின் கோரத்தை?
அச்; செயல்களும் விளைவுகளும் நிகழ்த்தும்
உணர்தலின் கோரமே
அச்சொல்லின் பொருளாகப் புலரும் வித்தையையும்
என்னவென்று சொல்ல?
காதல், அமைதி, அன்பு, சமாதானம், கருணை, நீதி, நியாயம், தோழமை, ஜனநாயகம் எதுவாயினும்.
ஆமாம், எதுவாயினும்.