Sunday, June 17, 2007

சிரிக்கும் பறவை



இன்னும் கொஞ்ச நேரமிருந்தால்

இந்த அவசரத்துக்கு

என்ன நடந்து விடப்போகிறது



தயக்கமுறும் நிழல்கள்

பின்னகர

இருளின் வாசம் நம்மீது கவிகையில்

அவிழும் நினைவுகளில்

எது யாரிடம்

எது யாரிடமும் இல்லை



ஒருமித்த ஞாபகங்களை

விலக்கும் கணங்கள்

எதிரெதிர் முனைகளில்

காந்த விசையைப் பெயர்த்தனவா



அறியேன்

எறும்புகளின் வன்முறைகளில்

உண்டா அடையாளமும்

பிரகடனமும்

அவற்றின் சினேகத்துக்கு

இருக்கிறதா பாடலும் இசைக்குறிப்புகளும்



துக்கத்தின் வலியில் சிதறுண்ட

எறும்புகளின் பாதையில்

ஏதேனுமொரு ஞாபகத் துண்டைப்

பார்த்தாயா



பறவைகளிலும் பூக்களிலும்

உன்னைப்பகிர்ந்தளித்து விட்டுப்

போனாய்

கரைந்து



யாசகனாய் நான்



தவிர்க்க முடியாதவாறு

நம் தனிமைக்குள் ஊடுருவி

நெடும் பயணம் நிகழ்கின்றன

உன் கண்கள் எடுத்து வந்த காட்சிகள்



எந்த வாசலிலும்

இல்லை

யாருடைய வரவேற்பும்



பனி விலகத் துடித்தெழும் தெருவில்

ஒரு பள்ளிச் சிறுமி

நகர மறுத்த காலப்புள்ளியில்

நின்று விளையாடுகிறாள்



நீயும் விளையாடுகிறாயா

கமெராவுடன்



திகைத்து நின்று

வழிமறிக்கும் நமதன்பு

தத்தளிப்புடன்

No comments: