Sunday, June 17, 2007

சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் பதுங்குகுழி

வானத்தை நான் பார்க்கவில்லை

நட்சத்திரங்களையும் காணவில்லை

பதுங்குகழியின்

இருளுக்குள் வீழ்ந்த வாழ்வின்

சருகு நான்

சூரியன் வந்ததா சென்றதா

நானறியேன்

நிலவின் ஒளியும் மறந்து போயிற்று



நிலம் அதிர்கிறது

குருதியின் மணத்தையும்

மரணத்தின்அருகாமையையும் உணர்கிறேன்

கந்தக நெடில்

கபாலத்தைப் பிளக்கிறது

வீரர்கள் முழங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்

அழியும் வாழ்வின் பிரகடனத்தை

ஒவ்வொரு துப்பாக்கியிலும்

ஒவ்வொரு பீரங்கியிலும்



பூக்கள் இனி எப்படியிருக்கும்

மரங்கள் மிஞ்சியிருக்குமா

பறவைகளின் சிறகுகளில்

சாவு வந்து குந்திக்கொண்டிருக்கும்

காலம் இதுவல்லவா



இந்தப் பதுங்கு குழிக்கு

நம் எதிர்காலத்தைக்காப்பாற்றும்

கருணையும் வலிமையுமிருக்கிறதா

அல்லது

எதிரியிடம் பலியிடும்

ஒற்றனைப்போலக் காத்திருக்கிறதா

No comments: