Monday, May 28, 2007

கனாக்கண்டேன் ஐ.பி.ஸி

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்

காற்றொலி கேட்டான் வானொலி படைத்தான்



- கண்ணதாசன்
உண்மைக்கும் பொய்க்குமிடையில் கிழிபடத்தயாராகவா

உம்மைத்தந்தீர்

மார்க்கோணி

ஒலியலைகளில்

உம்மைச் சேகரித்தீரே.



யாரேனுமொருவர் உமை நினைப்பரோ

வானொலி கேட்கின்ற போதில்.



தமிழர்கள் முதன்முதலாக எப்போது வானொலியைக் கேட்டிருப்பார்கள் என்று சரியாகத்தெரியவில்லை. அதுவும் தமிழிலான வானொலியை எப்போது கேட்டார்கள் என்று சரியாகத்தெரியவில்லை. இரண்டாம் உலகப்போர்காலத்திற்குமுன் இலங்கையில் ஒலிபரப்பு நடந்ததாகச்சொல்லப்படுகிறது. இல்லை அதற்குப்பின்னர்தான் ஒலிபரப்பு நடந்ததென்றும் சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஒவ்வொருவிதமாக ஒவ்வொரு காலகட்டத்தைச் சொல்கிறார்கள். ஆனால் தென்னாசியப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கும்முன்பு இலங்கை வானொலியில்தான் முதல் ஒலிபரப்பை கேட்டதாக கிடைத்த பதிவுகள் சொல்கின்றன. முதலில் இலங்கையில்தான் வானொலிச்சேவை ஆரம்பமாகியிருக்கிறது. அதற்குப்பிறகுதான் இந்தியாவிலும் பிற இடங்களிலும் அது விரிவடைந்திருக்கிறது.



இலங்கையிலும் தமிழ் ஒலிபரப்பு ஆரம்பமானது 1949இல்தான். கொழும்பிலிருந்த தபால் திணைக்களத்தின் ஒரு அறையில்தான் அந்த முதற்சேவை நடந்திருக்கிறது. பிரிட்டிஷ் படைகள் ஜேர்மனின் நீரிமூழ்கியைத்தாக்கியழித்தபின்னர அந்த நீர்மூழ்கியிலிருந்து மீடகப்பட்ட தொலைத்தொடர்பு சாதனத்தைப்பயன்படுத்தி அந்த ஒலிபரப்பைச் செய்ததாக தகவல். அந்த முதல் ஒலிபரப்பைக்கேட்டபோது அந்தத்தமிழ் மனிதன் எப்படிச்சந்தோசப்பட்டிருப்பான் என்று ஒருகணம் நினைத்துப்பாருங்கள்.



அப்போது வெள்ளையர்கள் இலங்கையைத்தங்களின் அதிகாரத்தின்கீழ் வைத்திருந்தார்கள். அதனால் வெள்ளையர்களே அந்த முதல் ஒலிபரப்பையும் செய்தார்கள். வெள்ளையர்கள் என்று சொல்லும்போது ஆங்கிலேயர்கள் என்றோ பிரித்தானியர்களென்றோ தனியாகச்சொல்ல வேண்டியுள்ளது. முன்னர் வெள்ளையர் என்றால் பிரித்தானியர் என்று எந்தக்குழப்பமும் இல்லாமல் புரிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது அப்படிச்சொல்லமுடியுமா? இப்போது ஐரோப்பியக்கண்டத்திலும் அவுஸ்ரேலியக்கண்டத்திலும் அமெரிக்காவிலும் நம்மாள்களுக்கு தாராளமாக உறவிருக்கிறது. அதனால் அவர்கள் எந்த வெள்ளையர்கள் என்று புரியாமல் குழம்பக்கூடும். எனவேதான் இந்த விளக்கம்.



பிரித்தானியர்கள் தங்களின் ஒலிபரப்புச்சேவையின் ஒரு அங்;கமாகவே இலங்கையிலும் வானொலிச்சேவையை ஆரம்பித்தார்கள்.



அந்த ஒலிபரப்பைக் கேட்பதற்கு அப்போது எல்லோரிடமும் வானொலிகள் இருக்கவில்லை. பொது இடங்களில் வைத்துத்தான் ஒலிபரப்பைக்கேட்டார்கள். அந்தப்பொது இடத்தில் சனங்கள் கூடுவார்கள். ஒலிபரப்பு நடக்கும்போது ஒருதுளி பிற சத்தம் கேட்காது. வானொலியின் ஒலிபரப்பை தேவகுரலினூடாக வரும் நற்செய்தியைக்கேட்பதைப்போலவே அவர்கள் கேட்டார்கள்.



அந்த ஒலிபரப்பில் அரச சேதிகளே அநேகமாக சொல்லப்பட்டன. வரையறுக்கப்பட்ட பிற நேரங்களில் நாட்டின் முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக மழை வெள்ளம், புயல், தேர்தல் கால அறிவிப்புகள் போன்ற விசயங்கள் சனங்களுக்கு அறிவிக்கப்பட்டன.



இப்படியே இருந்த வானொலிச்சேவை மெல்ல மெல்ல மக்கள் மயப்படத்தொடங்கியது. அப்படியே அது இன்னும் ஜனரஞ்சகமாகி வர்த்தக மயப்பட்டது. இதெல்லாம் இலங்கையின் வானொலி வரலாற்றைச்சொல்லும் நோக்கத்தையுடையதல்ல. பதிலாக எங்களிடம் எப்படி வானொலி அறிமுகமானது என்பது குறித்த ஒருசிறு அறிமுகம் மட்டும்தான்.



இலங்கை வானொலியுடன் சேர்ந்து இந்திய வானொலியும் ஈழத்தமிழருக்கு அறிமுகமாகியது. ஆனாலும் இலங்கை வானொலியே கவர்ச்சி மிக்கதாக இருந்தது. இலங்கை வானொலிக்கு இநதியாவிலும் பெரும் மதிப்பிருந்தது. இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்களாக இருந்தவர்கள் நட்சத்திர அந்தஸ்தத்தைப் பெற்றிருந்தனர். அந்தளவுக்கு இலங்கை வானொலிக்கு செல்வாக்கிருந்தது. இலங்கை வானொலியில் ஆரம்பவாளராகவும் முக்கியமானவராகவும் இருந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கரம்பனைச்சேர்ந்த இவர் பின்னாளில் பி.பி.ஸி தமிழோசையை ஆரம்பித்தவர்களிலும் முக்கியமானவராக இருந்தவர். இவருக்கு இந்திய வானொலியாளரிடமும் இப்போதும் பெரு மதிப்புண்டு.


முன்னர் எல்லா வீடுகளிலும் வானொலி இருந்ததில்லை. வைத்திருந்த சிலரும் அதை ராஜமரியயாதையுடனதான் வைத்திருந்தார்கள். இப்போதுள்ளதைப்போல கைக்கடக்கமாக சிறியதாக அவை இருக்கவில்லை. அப்போது ட்ராஸ்ஸிஸ்ரர் றேடியோவெல்லாம் கிடையாது. பெரிய பற்றி மொடல் வால்வ் றேடியோக்கள்தான் புழக்கத்திலிருந்தன. இயக்கியவுடன் சத்தம் வராது. சிறிது நேரம் போகத்தான் மெல்லமெல்ல சத்தம் வரும். அவற்றின் இயல்பு அப்படி. அவை தோற்றத்தில் பெரியனவாக இருந்ததால் அவற்றை வைப்பதற்கென்றே தனியாக இடமொதுக்கி அவற்றுக்கென்றே தனியாக மரத்தாலான தட்டுகளையும் செய்து வைத்திருந்தார்கள். அதுக்குப்ப+ட்டுவேறு போட்டிருந்தார்கள்.


முதலில் குறுண்டிக், பிலிப்ஸ், கொஸோ ரெலிபங்கன், ஷார்ப் என்ற றேடியோக்கள் மிகப்பிரபலமாக இருந்தன. அதற்குமுதல் மார்க்கோனி என்றொரு றேடியோ இருந்ததாக நினைவு. ஆனால் அதை சரியாகச் சொல்ல முடியவில்லை.

வால்வ் மொடலுக்குப்பிறகு ட்ரான்ஸ்ஸிஸ்ரர். அதுக்குப்பிறகு ஐ.ஸி மொடல் வந்தது. பின்பு இப்போதுள்ள டிஜிற்றல் வகை வந்திருக்கிறது. காலம் மாறிவிட்டது. ஆயிரம் வகையிலும் விதவிதமான வடிவங்களிலும் தினம்தினம் றேடியோக்கள் வந்து கொண' டேயிருக்கின்றன.

அப்போது வானொலியைக்கேட்பதே ஒரு முக்கியமான வேலை. கண்ட நேரமெல்லாம் அதைக் கேட்கமுடியாது. எல்லா நேரமும் ஒலிபரப்பு இருந்ததும் இல்லை. சனங்களுக்கு தாராளமாக நேரமிருந்தாலும் அந்தளவு நேரத்தையும் உள்ளடக்கி எந்த ஒலிபரப்புச்சேவையும் இருக்கவில்லை. குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டிந்த நேரத்தில்தான் ஒலிபரப்பு நடந்தது.

எல்லா வேலைகளையும் முடித்;துக்கொண்டு கைகால் முகம் கழுவி வந்து ஒரு மாலைத்தேனீரொடு ஆரம்பிக்கும் வானொலி கேட்கும் படலம். அப்பொழுதுதான் றேடியோ போடப்படும். அதற்குமுன் காலை ஒலிபரப்பைக் கேட்டிருப்பார்கள். அநேகமாக இரவு ஒலிபரப்புத்தான் முக்கியமானது. றேடியோவைக்கேட்பதற்கென்றே அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஆட்கள் வருவார்கள். பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சலில்லாமல் மெல்லிய ஒலியில் அடக்கமாக ஒலித்துக்;கொண்டிருக்கும் வானொலி. சில கிராமங்களில் அங்கிருந்த வாசிக சாலையிலும் வானொலிகளை வைத்து ஒலிபரப்பைச்செய்தார்கள்.




இரவு கேட்கும் நிகழ்ச்சிகளைப்பற்றி அடுத்தநாட் காலையிலோ மாலையிலோ அல்லது இரவிலோ பேசிக்கொள்வார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பவும் பட்டன. பெரும்பாலும் நாட்டுநடப்புகளை அறியக்கூடிய ஒரு சாதனம் என்ற மனப்பதிவுதான் மக்களிடம் இருந்தது. செய்திகளையும் மக்களை வழிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளையும்தான் அந்தநாட்களில் ஒலிபரப்பில் சேர்த்துக்கொண்டார்கள்.

அதனால் அதற்கென்றே நேரத்தை ஒதுக்கி அவற்றைக்கேட்டார்கள். வானொலி வீட்டுக்குள் வெளியுலகத்தைக் கொண்டுவந்;த நல்லதொரு விருந்தாளியாகவே இருந்தது. அதனால் அதற்கென்றொரு தனியான மதிப்புமுண்டாகியது.


பெரிய வானொலிப்பெட்டிகளாக இருந்தபடியால் அவற்றை லேசில் எங்கும் எடுத்துச்செல்லமுடியாது. பக்குவம் பார்க்கவேண்டியதொரு பொருளாகவே அதை அதற்கென்றுதனியாகச் செய்யப்பட்ட பெட்டியில் வைத்துப் பாவித்தார்கள். சிலர் அதற்கென்றே தனியாகப்ப+ட்டுகளைச் செய்துவைத்திருந்ததும் உண்டென்று சொன்னேனல்லவா. அநத அளவுக்கு அதன் மதிப்பிருந்தது.


பிறகு ட்ரான்ஸிஸ்ரர் அறிமுகமானது. வானொலியில்நடந்த அடுத்தகட்டப்புரட்சி ட்ரான்ஸிஸ்ரர்தான். அது விலையும் குறைவு. கையாளவும் வசதியாக இருந்தது. ட்ரான்ஸிஸ்ரர் வந்தபிறகு எல்லா இடங்களிலும் அது பரவியது. றேடியோ என்பது சாதாரணமாகி விட்டது. சாதாரணமாக அது கையாளப் படவும்தொடங்கியது. அதனுடைய இறுக்கத்தன்மை கலைந்து நெகிழ்ச்சியுள்ளதொரு பொருளாகி விட்டது. அதேவேளை இப்போது நிகழ்ச்சிகளும் அதிகமாகி விட்டன. இதெல்லாம் சனங்களை வானொலியை நோக்கி கவர்ந்திழுத்தது. சனங்கள் தஙகளின் பொழுது போக்குக்காகவும் வளர்ச்சியடைந்துவரும் உலகின் தகவல்களை அறிவதற்காகவும் தவிர்க்க முடியாமல் வானொலியின் பக்கம் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. படித்தவர்;கள், படிக்காதவர்கள் எல்லோருக்கும் வானொலி நெருக்கமானது.


இப்போது இலங்கை போன்ற நாடுகளில்; வானொலி என்பது ஒரு மைய மீடியாவாகிவிட்டது. இது இந்த நாடுகளில் வானொலியின் மறுமலர்ச்சிக்காலம். இந்த மறுமலர்ச்சிக்காலத்தை இன்னும் வடிவாகச்சொன்னால் ஈழத்தமிழர்கள் விசுவமடுவிலும் முத்தையன் கட்டிலும் வவுனிக்குளத்த்pலும் இடைக்காட்டிலும் தங்களுடைய தோட்டத்தில் வெங்காயத்துக்குப்புல்லுப் பிடுங்கிக்கொண்டே தணியாத தாகம் நாடகத்தை கேட்டபோதே அது மலர்ந்தது எனலாம்.

அப்போது விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வானொலியுடன்தான் தண்ணீர் கட்டினார்கள். வயற்காவலுக்குப்போகும்போதுகூட பொழுது போவதற்காக றேடியோவை எடுத்துப்போனார்கள். கடற்கரையில் மீனைக்காயப்போடும்போதும் றேடியோ பக்கத்திலிருந்து பாடியது. வீட்டிற்குள்ளிருந்து பாடிய வானொலி வெளியே உலாத்தத்தொடங்கியது. அநேகமாக எல்லா வீடுகளிலும் எல்லா இடங்களிலும் வானொலி பரவிவிட்டது. ஆனால் இப்போது றேடியோ என்றால் பாட்டுப்பெட்டி என்ற சித்திரம்தான் பொதுவாக எல்லோரின் மனதிலும் பதிந்திருந்தது. றேடியோப்பாடுகிறது என்றே இன்னும் சொல்கிறார்கள். ஆனால் வானொலி பாடுவதுமட்;;;டுமில்லை. அது பேசுகிறது, கதைசொல்கிறது, தகவலை வழங்குகிறது. நாடகங்களைக் கேட்கவைக்கிறது. இரண்டுபேரோ நாலுபேரோ சேர்;ந்து உரையாடுவதை நாமும் கேட்க வைக்கிறது. ஆனால் இதெல்லாத்தையும்விட அது பாடுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. வானொலியை ஏறக்குறைய ஒரு பாடும் சாதனமாக்கியே விட்டார்கள். குறிப்பாக இலங்கை வானொலியின் வர்த்தகசேவைதான் இந்தப்பெரும் புண்ணியத்தைச் செய்தது. அது தமிழகச்சினிமாவின் பாடல்களை மையமாக வைத்தே தன்னுடைய வர்த்தக சேவையை நடத்தியது. பிறகு மெல்லமெல்ல இந்தப்போக்கு வளர்ந்து வானொலியென்றால் பாட்டுக்கேடபதற்கென்றே ஆகிவிட்டது. இப்போது தமிழில் ஒலிபரப்புச்செய்கிற பெரும்பாலான வானொhலிகளும் இந்தமாதிரி தமிழகத்தின் சினிமாப்பாடல்களை ஆதாரமாகக்கொண்டே தமது ஒலிபரப்பைச்செய்கின்றன. அதுவும் எவ்.எம்.றேடியோக்களுக்கு இதைத்தவிர வேறு மார்க்கமேயில்லை.

வானொலியின் புழக்கம் சாதாரண மக்களிடம் பெரும் அறிவுமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிட வேண்டும். படிப்பறிவு குறைந்த மக்களும் வானொலியைக் கேட்க முடியும் என்ற வசதி இதற்கு அதிகபட்சமான சாதகங்களை வழங்கியிருந்தது. இதுபற்றி தனியாக விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக சமூகவியல் கண்ணோட்டத்தில் அது ஆய்வுசெய்யப்பட்டால் அதன் பெறுமதி இன்னும் அதிகமாகும்.

பகுதி இரண்டு


தேரதல்காலத்தில் வானொலிக்கிருக்கும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. ஆட்சி மாற்றம் என்பது அல்லது அந்தத் தேர்தலில் யார்வெல்லப்போகிறார்கள் என்பது சனங்களுக்கு முக்கியமாகிவிடுகிறது. இதில் அவர்களின் எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்பது இன்னும் கூடுதல் அக்கறைக்குரியது. தேர்தல்காலம் தவிர பிற முக்கியமான சந்தர்ப்பங்கள் வெள்ளம் புயல் போன்ற அனர்த்த காலங்களில்தான் வானொலிக்கிருந்தது. மற்றும்படி அது வீட்டில் இனிய தோழியாக சிலருக்கிருந்தது. சிலருக்கு அன்புக்குரிய நண்பனாக இருந்தது. வேறு சிலருக்கு நல்ல ஆசானாகவும் இன்னும் சிலருக்கு அது வழிகாட்டியாகவும் இருந்தது.


ஆரம்பத்தில் புண்ணியமூர்த்தி, கே.ஏ.கப+ர், செந்தில்மணி மயில்வாகனம் போன்றோர் நல்ல அறிவிப்பபாளரகளாகவும் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களாகவும் இருந்தார்கள். பிறகு வர்த்தக சேவையில் மயிலவாகனம் ஒரு தனிச்சகாப்தம் படைத்தார். அவரோடிணைந்து மொறாயஸ் இப்ராகிம், கோகிலவர்த்தனி சிவராஜா, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி துரைராஜசிங்கம், கணேஸ்வரன், ஜோர்க்கின் பெர்ணாண்டோ, பி.எச். அப்துல் ஹமீத், நடராஜசிவம் எனப்பலர் இலங்கை வானொலியில் சனங்களோடிணைந்திருந்தார்கள்.


இன்னொரு தரப்பில் ஜோர்ஜ் சந்திரசேகரன, சற்சொருபவதி, பி.விக ;னேஸ்வரன், நடேச சர்மா போன்றவர்கள் அறிமுகமாகியிருந்தார்கள்.

இதேவேளை வேறொரு வகையில் குறிப்பாக கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித்தயாரிப்பாளரகளாக, வானொலி நாடகங்களில் பங்கேற்பவர்களாக சானா, காவலூர் ராஜதுரை, விஜயாள் பீற்றர், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராசன், கா.சிவத்தம்பி, முரகையன் போனன்றோர் இருந்தனர்.

இப்படியெல்லாமிருந்த வானொலிக்கென்றொரு காலம் பிறந்தது.அது வானொலியைக்கேட்கவே அஞ்சுகின்ற காலம். அஞ்சினாலும் அதைக்கேட்டே ஆகவேண்டுமென்ற கட்;;;;;;;;;;;டாயங்கள் நிறைந்த காலம். என்னதான் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும் யதார்த்தத்தை யாராலும்; புறக்கணிக்க முடியாதல்லவா.

தமிழரைச் சிங்களவர்கள் அடித்தார்கள். அடித்து விரட்டினார்கள். விரட்டிக்கலைத்தார்கள். ஓடுங்கள், ஓடி உங்களுடைய ஊருக்குப்போங்கள் என்று கத்தியோடும் பொல்;லுகளோடும் தீப்பந்தங்களோடும் தெருவில் நின்று கத்தினார்கள். வன்முறை வெடித்தது. குருதி வடிந்தது. தீயிலும் புகையிலும் தமிழரின்தேட்டமும் வாழ்வும் கருகியது. அப்போது வானொலிக்கருகில் கலக்கத்தோடிருக்கத்தொடங்கினார்கள் தமிழர்கள். ஆராருக்கு என்ன நடக்கிறதோ? எங்கே என்னவெல்லாம் செய்கிறார்களோ என்று பதற்றத்தோடும் பதைக்கும் நெஞ்சோடும் றேடியோவுக்கருகில் காத்திருந்தார்கள் தமிழ்க்குடிகள். ஆனால் வானொலி எல்லா உண்மைகளையும் சொல்லவில்லை. என்ற போதும் சனங்கள் அதைக்கேட்பதைத்தவிர வேறுவழியில்;லாமல் கிடந்தார்கள். சொல்லப்படுகின்ற கொஞ்சச் செய்திகளுக்காகவே அவர்கள் அப்படியிருந்தார்கள். அதைத்தவிர வேறு என்;னதான் அவர்களால் செய்யமுடியும்.

அப்போதுதான் ஓரளவுக்கு உண்மையைச் சொல்லக்கூடிய இன்னொரு வானொலியென்று இந்திய வானொலியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதுவரையிலும் இனிய வானொலியாக இருந்த இலங்கை வானொலியை சனங்கள் சந்தேகிக்கத்தொடங்கினார்கள். இலங்கை வானொலி முதலில் உண்மைகளை மறைக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பொய்சொல்லும் வானொலியை விட்டு அவர்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வேறு வானொலியின் பக்கம் போனார்கள்.

தொடக்கத்தில்; இந்திய வானொலியில் சரோஜ் நாராயணனும் ராஜாராமும் தங்களுக்காகவே செய்திகளைச் சொல்கிறார்கள் என்று நினைக்குமளவுக்கு ஆவலோடு கேட்டார்கள். அந்தமாதிரித்தான் அவர்களும் செய்திகளைச்சொன்னார்கள்.
இலங்கையில் தமிழர்கள் படுமோசமான முறையில் வதைக்கப்பட்டார்கள். போரை பகிரங்கமாக இலங்கை அரசாங்கம் தமிழர்களின்மீது பிரகடனப்படுத்தியது. எந்த றேடியோவின்மூலம் தங்;களுக்கான நற்செய்திகளையெல்லாம் கேட்கலாம் என்று முன்னர் நம்பியிருந்தார்களோ அந்த றேடியோதான் இப்போது அவர்களுக்கெதிராகப் போர்ப்பிரகடனஞ்செய்தது. தமிழர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். போர்ப்பிரகடனஞ்செய்த வானொலி பிறகு பொய் சொல்லத்தொடங்கி விட்டது. போரில் முதலில் பலியாவது உண்மை என்பார்கள். உணமையாகவே உண்மைதான் இங்கும் பலியாகியிருந்தது. உண்மைசொல்லாத வானொலியை யாரும்நம்ப மாட்டார்களல்லவா. தமிழர்கள் இலங்கை வானொலியை விட்டு மெல்ல இந்திய வானொலியின் பக்கம் போனார்கள் என்று சொன்னேனல்லவா. அவர்கள் பிறகு ஆல் இந்தியா றேடியோவின் ஆகாஷவாணி செய்திகளையும் மாநிலச்செய்திகளையும் முழதாக நம்பிக்கேட்கத்தொடங்கிவிட்டார்கள். இந்த இரண்டு சேவையிலும் சொல்லப்படும் செய்திகள் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவை நற்செய்திகளே. உண்மையில் அவை ஒருவகையில் ஆறுதலைத்தந்தன. அந்த ஆறுதல் அப்போது தேறுதலையும் தந்தது. பின்னர் இந்தக்கதை யெல்லாம் மாறியது வேறுண்டு.

மாநிலச்செய்திகளைக்கேட்பதற்கு தினமும் மாலை நேரங்களில் சநிதிகளிலும் பொது இடங்களிலும் வீடுகளிலும் சனங்கள் கூடினார்கள். சொல்லப்படும் செய்திகளை ஆவலோடு கேட்டார்கள். கேட்டு நம்பினார்கள். அப்படி நம்;பித்தான் பிறகு கெட்டார்கள். சனங்களைக் கெட்டார்கள் என்றும் சொல்லமுடியாது. மக்களை கெடுதிக்காளாக்கினார்கள் ஆல் இந்தியாக்காரர்கள்.

எங்களுக்கும் ஆதரவாக யாரோ இருக்கிறார்கள். நாங்கள் தனித்துவிடவில்லை என்று நம்பிய சனங்களை ஆல் இந்தியா றேடியோவின் ஆகாஷவாணிச்செய்தியும் ஏமாற்றியது. மாநிலச்செய்தியும் ஏமாற்றியது. இதில் மாhநிலச்செய்தி ஏமாற்றியதைத்தான் யாராலும் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மத்திய அரசைமீறி மாநில அரசு எதையும் செய்யமுடியாது என்று தெரிந்தாலும் இப்படி ஒரேயடியாக அது கைவிட்டுவிடும் என்று நம்பக்கஸ்ரப்பட்டார்கள். எதிர்பார்க்காவிட்டாலும் விரும்பா விட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டும் என்பது யதார்த்தமாகி விட்டது.

சிங்களப்படைகள் ( இப்படிக்குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும். இலங்கைத்தீவில் பல இனங்கள் இருந்தாலும் இதன் படையோ முழுமையாகவும் சிங்களவர்களைக்கொண்டதே என எழுத்தாளர் சாந்தன் ஒரு தடவை சொன்;னது மிகச்சரியானதே.) செய்த கொடுமைகளையெல்லாம் அப்போது பி.பி.ஸியுடன் இணைந்து வெரித்தாஸ{ம் சொல்லியது. ஆனால் இதையெல்லாம் மீறி இந்திய வானொலிகள் சிறிலங்காப் படைகளின் அட்டுழியங்களையெல்லாம் வெளிப்படுத்தின.

சென்னை வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி என்றெல்லா றேடியோவோடும் ஈழத்தமிழருக்கு நல்ல பரிச்சியமிருந்தது. அந்தளவுக்கு உறவிருந்தது. நெருக்கமுமிருந்தது.

இப்படியெல்லாமிருந்த வானொலிகள்தான் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது அன்புவழி என்றும் நேசக்கரம் என்றும் ஈழத்தமிழருக்காகவென்றே சிறப்பாக நிகழ்ச்சிகளைச் செய்து ஒலிபரப்பின. ஈழத்தமிருக்கென்று தனியாக அவை ஒலிபரப்பைச் செய்தபோதும் அதை எந்த ஈழத்தமிழரும் கேட்கவேயில்லை. எப்படி இலங்கை வானொலி தமிழருக்கெதிராக போர்பிரகடனம் செய்ததோ அதுபோலவே இந்திய வானொலிகளும்; ஈழத்தமிழரின்மீது போர்ப்பிரகடனம் செய்தன. இங்கும் முதலில் பலியானது உண்மைதான். உண்மை பலியாவதைப்பற்றி யாருக்குத்தான் கவலை?

அன்புவழி, நேசக்கரம் என்ற பெயர்களுக்கு எதிர்மாறாகவே இல்லாத பொல்லாத கதையையெல்லாம் இந்திய வானொலிகள் சொல்லிக் கொண்டிருந்தன. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ஒன்றுண்டு. இப்படி இந்த வானொலிகள் பொய் சொல்வது என்பது தனியே ஈழத்தமிருக்கு மட்டுமல்ல தங்கள் மக்களுக்கும்தான். இலங்கை வானொலி சிங்களவருக்கும் பொய்யையே சொன்னது. அதேபோல இந்திய வானொலியும் தன்னுடைய சனங்களுக்கு பொய்யைத்தான் சொன்னது.

பொய ' சொன்ன றேடியோக்களை விட்டு தமிழர்கள் மெல்ல வேறுபக்;கம் நகர்ந்தார்கள். தமிழில் சிங்கப்ப+ர் வானொலி, சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் பீக்கிங் வானொலி போன்றவையைக்கூட அவர்கள் மிகச்சிரமப்பட்டுக் கேட்டார்கள். உண்மையைத் தேடுவதென்பது சாதாhரணமானதல்லவே. இந்த அனுபவம் ஈழத்தமிழருக்கு நிறையவுண்டு. ஏனெனில் அவர்கள் இப்போதும் உண்;மையைத்தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இப்படியான மிக வில்லங்கமானதொரு சூழலில்தான் தமிழர்கள் தாங்களே தங்களுக்கான வானொலிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். எண்பதுகளின் நடுப்பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு படுத்தப்பட்டாலும் அது முழு அளவிலான சாத்தியப்பாட்டுக்க வந்தது தொண்ணூறுகளில்தான். எண்பத்தியேழாம் ஆண்டு புலிகளின்குரல் வானொலி யாழ்ப்;பாணத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டபோதும் இந்திய இராணுவத்துடனான போருடன் அது ஏறக்குறைய மூன்றாண்டுகள் இடைநின்றது.

தொண்ணூறுகள் ஈழத்தமிழரைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டம் எனலாம். எண்பதுகளில் அடித்து விரட்டப்பட்ட தமிழரெல்லாம் தொண்ணூறுகளில் பலம்பெறத்தொடங்கி விட்டார்கள். யாரிலும் தங்கி வாழாது தங்களின் சொந்தக்காலில் நிற்கக்கூடியதொரு நிலைக்கு அவர்கள் வந்த காலகட்டம் அது.

தொணணூறின் ஆரம்பத்திலேயே மீண்டும் புலிகளின் குரல் வானொலி ஒலிக்கத்தொடங்கியது. தமிழர்கள் தங்களின் கதையை தாங்களே சொல்லத்தொடங்கினார்கள். இதுவொரு மாறுதாலான காலகட்டம். இலங்கைத்தீவில் இரண்டு மையங்கள் இருக்கின்றன என்ற யதாhர்த்தத்தை ஆதாரப்படுத்திய காலகட்டம். ஆய்வாளர் நிலாந்தன் சொல்வதைப்போல கொழும்பு மையத்திலிருந்து தமிழர்கள் விடுபட்டு தங்களுக்கென்றொரு மையத்தை கட்டியெழுப்பிய காலகட்டம். அது மீடியாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி.

அப்போது வேறு வானொலிகள் அதிகமிருக்கவில்லை. லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் இரண்டும் அவற்றின் குறைந்தளவு நேரச்சேவையிலும் செய்திகளை முதன்மைப்படுத்தியிருந்தன. மற்றச்சேவைகளை விடவும் இந்த இரண்டும் கூடுதலான உண்மைச்செய்திகளை வெளியிட்டன. பி.பி.ஸி க்கு எண்பதுகளில் இருந்தே சங்கர் இருந்தார். வெரித்தாஸ{க்கு சாமி இருந்தார். சங்கரும் சாமியும் ஈழத்தமிழர்களுக்கு அந்நாட்களில் மிக நெருக்கமாகியிருந்தார்கள். அவர்கள்தான் மற்ற எல்லோரையும்விடவும் தமிழ்மக்களின் உண்மை நிலைவரத்தைச் சொன்னார்கள். அதனால் அவர்கள் இருவரையும் தங்களுக்கு மிக நெருக்கமாகத் தமிழர்கள் கருதினார்கள். இப்போதும்கூட இந்த இரண்டு றேடியோக்காரர்களையும் லேசில் மறந்துவிட முடியாது. பின்னாட்களில் பி.பி.ஸி யில் ஆனந்தியும் வெரித்தாஸில் ஜெகத் கஸ்பாரும் அந்த இடங்களைப்பிடித்திருந்தார்கள். அதன்காரணமாக அவர்கள் இருவரும் பட்ட சிரமங்களும் அதிகம்.

சிற்லைகள் நடுத்தர அலைவரிசைகளுடன் புதிதாக பண்பலைவரிசை கூடுதலான செல்வாக்;கைச்செலுத்தத்தொடங்கியிருந்தது. பண்பலைவரிசையின் பெருக்கம் வானொலிகளின் பெருக்கத்;துக்கும் வசதியைக் கொடுத்தது. முன்னர் அரசு மட்டும்தான் வானொலியை நடத்தியது. ஆனால் பின்னர் தனியார் ஒலிபரப்புகள் அதிகளவில் வந்துவிட்டன.

பகுதி மூன்று.



உயிரே படத்தில் சாருக்கான் இந்திய வானொலியின் செய்தியாளராக வருகிறார். தீரவாத அமைப்பொன்று போராட்டத்தை நடத்துகின்ற பகுதிக்கு உண்மை நிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக அங்கே செல்கிறார். அங்குள்ள யதார்த்தத்தை அவர் அறிந்த போதும் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான வழியும் பாதுகாப்பும் என்ன என்பது குறித்த பார்வையை அவர் பெறமுடியாமல் போகிறார். அவருடைய செய்திப்பணி என்பது ஒரு கட்டத்தில் அதன் பெறுமதியை இழந்து விடுகிறது.

இந்தமாதிரி பல ஊடகக்காரர்களின் பணிகள் அவர்களால் பெறமதியற்றவையாக உணரப்பட்டிருக்கின்றன. உண்மைக்கு மாறாகவே தான் பல தடவைகளில் செய்திகளை வாசித்திருக்கிறேன் என்று இலங்கை வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அறிப்பாளர் ஒருவர் கவலையோடு சொன்னார். தான் அவ்வாறான செய்திகளை வாசித்துவிட்டு வீட்டுக்குப்போகும்போது செய்தியில் சொல்லப்பட்டவை உண்மைதானா என்று வீட்டில் பிள்ளைகள் கேட்பார்களாம். பிள்ளைகளிடம் பொய் சொல்ல முடியுமா? அதைவிடவும் தான் வாசித்த அந்தச் செய்தியில் சொல்லப்பட்ட தகவல்களில் அந்தப்பிள்ளைகளுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. என்;றபடியால்தான் அவர்கள் அப்படித் தன்;னிடம் கேட்டதாக மிகவருத்தத்தோடு அந்த நண்பர் தன்னுடைய பணிகுறித்தும் நிலைகுறித்தும் சொன்னார். அவர் பிறகு தன்னுடைய பணியைவிட்டு விலகி வேறிடம் சென்றுவிட்டார்.

பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். பேயும் பிணமுமாகிவிட்டது உலகம்.

பகுதி நான்கு.

எம்தமிழ் உறவுகளுக்கு உறவுப்பாலம் அமைக்க வருகிறது ஐ.பி.ஸி. என்ற அறிவிப்புடன் ஒரு நாள் ஒரு புதிய ஒலிபரப்பைக் கேட்டேன். அது முற்றிலும் புதியதுதான். அது நடந்தது பத்தாண்டுகளின் முன்பா? இருக்;கலாம். அப்போது வன்னியை ஊடறுத்து சிறிலங்காப்படைகள் ஜெயசிக்குறு என்ற பெயரில் பெரும் படையெடுப்பொன்றை நடத்திக்கொண்டிருந்த காலம். தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்தில்லை. தொலைபேசியில்லை. கடிதம்கூட ஒழுங்குமுறையில் வராது. சனங்கள் இங்கும் அங்குமாக பிரிந்து போயிருந்தார்கள். பக்கத்தில் ஐந்து பத்துக்கிலோ மீற்றர் தொலைவில் இருந்தவர்கள் அடுத்த ஊரக்குப் போவதற்கு நூறு நூற்றம்பது கிலோ மீற்றர் தூரம் சுற்றி கப்பலேறி கடல்வழிப்பயணம் செய்து படாத பாடெல்லாம் பட்ட காலம் அது. தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவது என்பார்களே அப்படித்தான் நடந்தது. பலவேளை அப்படித்தொடவும் முடியாது.

அப்போது பலருக்கு சரியான தொடர்புகளில்லை. யார் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாத நிலை. யுத்தம் முழுத்தீவிரத்தோடு தன் வலிமையைக்காட்டிக் கொண்டிருந்தது. மரணச்செய்திகள் சாதாரணமாகி அதுவொரு நாளாந்த நிகழ்ச்சி நிரல் போலாகியிருந்தது. அப்போது ஒரு பரிவுமிக்க தோழனைப்போல வெரித்தாஸில் ஜெகத் கஸ்பார் வெரித்தாஸில் உறவுப்பாலத்தை ஆரம்பித்தார். பாவப்பட்ட மக்களுக்காக மன்றாடுகின்றேன் தேவனே என்றமாதிரி அந்த நிகழ்ச்சி ஒருபெரும் மன ஆறுதலைத்தந்தது. தொடர்பில்லாதிருந்தவர்கள் எல்லாம் இணைக்கப்பட்டார்கள். அறியாத சேதிகளெல்லாம் அறியப்பட்டன. மூடிய கோட்டையைத் திறக்கும் ஒரு மோஸேஸின் செயலைப்போல கஸ்பாரின் உறவுப்பாலம் இருந்தது. ஜெகத் கஸ்பாரின் மூலம் வெரித்தாஸ் எல்லா வீடுகளிலும் ஒலித்தது. கஸ்பார் உணர்வுகளால் நெருங்கி ஈழத்தமிழர்களுடன் உறவாகினார்.

வெரித்தாஸைப்போல ஐ.பி.சி ஆதரவாகத் தலையைத்தடவி கண்ணீரைத்துடைத்துவிடும் ஒரு பரிவுநிரம்பிய தாயாக தாயகத்துக்கு வந்தது. காலை ஐந்தரைமணிக்கு நம்பிக்கை தரும் சொற்களோடு எங்களைத் துயிலெழுப்புவார் தாசீஸியஸ். எங்களுக்கானதொரு நல்ல வானொலி எப்படி அமைய வேண்டுமெனக்கனவு கண்டோமோ அதை எங்களுக்கு உண்மையிலேயே தந்தார்கள். ஐ.பி.சி யைக்கேட்பது தினமும் தவறக்கூடாது என்றாகி விட்டது. ஒருநாள் தவறினாலும் பலதை இழந்துவிடுவோம் என்று கவலை கொள்ளுமளவுக்கு அது அத்தனை விதமாக இருந்தது. அத்தகைய சிறப்புகளுடன் இருந்தது.

லண்டனிலிருந்து உலகத்தமிழருக்காக ஒலித்த அந்த வானொலி உண்மையில் தமிழ் வானொலிகளின் வரலாற்றில் ஒரு புதிய தடம்தான்.

ஐ.பி.சி உறவுப்பாலம் புலத்துக்கும் தாய்நிலத்துக்குமான இணைப்பாக அதன் சரியான பிரயோக அர்த்தத்துடனிருந்தது. ஈழத்தமிழர் தங்களுக்கான ஒரு வானொலியை ஏற்கனவே ஸ்தாபித்திருந்தார்கள். அது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோக ப+ர்வ வானொலியாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் ஒரு ஊடகமாகவோதான் தொழிற்பட்டது. அதற்கடுத்;தபடியாக புலத்திலிருந்து ஐ.பி.சி இன்னொரு நிலையில் தாயக விடுதலைப்போராட்டத்தையும் தாயகத்திலுள்ள மக்களையும் புலத்திலுள்ள மக்களையும் இணைத்து ஒரு மறுமலர்ச்சிக்காலகட்டத்தை உருவாக்க முனைந்தது. குறிப்பாக தாயகத்துக்கப்பால் புலம்பெயர்ந்து வாழும்களத்திலிருந்து அது ஒலிபரப்பாகியது என்பதால் தாயகம் மீதான தாகத்தை அதிகளவில் கொண்டுள்ளதாக ஐ.பி.சி யை அடையாளம் காணலாம்.

ஐ.பி.சி யில் மொழிக்குச்சிறப்பிடம் இருந்தது. தொலைதூரத்தில் பிறமொழிச்சூழலில் வாழும்போது தாய்மொழி மீது பெரிய தாகம் ஏற்படும். புலத்தில் வாழ்கின்றபோது அந்நிய மொழிச்சூழலில் ஏற்படுகின்ற மனநெருக்கடிகளுக்கு றிலாக்ஸ் பண்ணுகிறமாதிரி தமிழில் கூடுதலான கவனத்தை ஐ.பி.சி யின் அறிவிப்பாளர்களும் நிகழ்சித்தயாரிப்பாளர்களும் கொண்டிருந்தார்கள். அதாவது அவர்கள் தங்களின் திருப்திக்காகவே இந்தமாதிரி மொழியில் அதிக அக்கறையெடுத்து கடுமையாக உழைத்தார்கள். தமிழ் இலக்கணத்தைக்கூட தாசீஸியஸ{ம் இரவி அருணாசலமும் மிக அழகாக ஆர்வமாகக் கேட்கவைத்தார்கள்.

ஐ.பி.சிக்குடும்பத்தினர் அந்த அரைமணிநேரத்தையும் பெறுமதியாக்கியேயிருந்தார்கள். நிகழ்ச்சித்தொகுப்பு, நிகழ்ச்சி அமைப்பு, குரல், ஒலிப்பதிவு, இசைப்பயன்பாடு, நேரஅளவு, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என எல்லாவற்றிலும் பிரக்ஞை ப+ர்வமான அணுகுமுறையிருந்தது. அறிவுப+ர்வமான அணுகுமுறையை ஊடகமொன்று கவனிக்கவேண்டிய நெறிமுறையை ஐ.பி.சி. கொண்டிருந்தது. இதுதான் மிகக்குறைந்த காலத்திறகுள்ளேயே அதை எல்லோரும் கேட்கக்கூடியவாறாக்கியது. ஐ.பி.சி. க்கு மிகக்கூடுதலான நேயர்கள் பெருகியிருந்தார்கள். நாள்தவறாமல் காலை ஐந்தரைமணிக்கு அதைக்கேட்கும் வழக்கம் போர்க்களம் வரையில் இருந்ததென்று தாசீஸியஸிடமும் இரவி அருணாசலத்திடமும் கௌரி ரவிசங்கரிடமும் பல போராளிகள் நேரில் சொல்வதைப்பார்த்திருக்கிறேன்.

ஐ.பி.சி புலத்தில் இருபத்திநான்கு மணிநேர ஒலிபரப்பைச்செய்தது. அதை நாம் கேட்க முடியவில்லை. எங்களுகக்குக்கிடைத்தது அரை மணிநேர ஒலிபரப்பு மட்டும்தான். அந்த அரைமணிநேரத்தில் நாங்கள் புலத்தோடிணைந்தோம். புலம் எங்களோடிணைந்தது. இதுதான் ஐ.பி.சி உறவுப்பாலம்.

புலம் என்னும் போது இனனொரு ஞபகமும் வருகிறது. ஐ.பி.சி புலம் என்றொரு நல்ல சஞ்சிpகையையும் வெளியிட்டிருந்தது. ஏறக்குறைய ஆறு அல்;லது ஏழு இதழ்கள் வெளிவந்திருக்கலாம் என்று நினைவிருக்கிறது. புலம் இதழ்களில் ஒரு வானொலி சஞ்சிகைக்கு அப்பாலான புதிய உள்ளடக்கச் செழுமையிருந்தது. ஈழத்திலக்கிய அறிமுகம், மொழி பற்றிய கட்டுரைகள், முன்னோடிப்படைப்பாளிகளின் அறிமுகமும் அவர்களுடைய சிறந்த படைப்புகளின் தெரிவும் இன்னும் பல புதிய விசயங்களும் புலத்தில் இடம்பெற்றன.

ஒரு வானொலி ஒலியை அடிப்டையாகக் கொண்டது. அந்த ஒலியை எப்படிக்கையாள்வது என்பதைப்பொறுத்தே அது மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. அது வழங்கும் ஒலியில் என்னென்ன அம்சங்கள் எப்படியெப்படி அமைகின்றன என்பதுதான் இதில் முக்கியமானது. மொழியும் இசையும் இதில் முக்கியமானவை. மொழியைக்கையாள்வது வானொலியில் ஒருகலை. அந்த மொழியினூடாக எவ்வாறான பயனுள்ள விசயங்கள் பேசப்படுகின்றன என்பதைப்பொறுத்தே அந்த வானொலியை மக்கள் அடையாளம் காண்கிறார்கள். அப்படிக்கண்டு அதைத் தங்களுடன் இணைத்துக்கொள்வதற்கும் அதுவே காரணமாகிறது.

பல வானொலிகளிலும் இப்போது சரியான மொழிப்பிரயோகம் இல்லையென்று மூத்த வானொலி அறிவிப்பாளர்களே வெளிப்படையாக சொல்கிறாhர்கள். அத்துடன் இளைய தலைமுறை அறிவிப்பாளர்களில் பலர் வயிற்றாலும் மூக்காலுமே கதைக்கிறார்கள். ஆனால் வானொலியை புதிய தலைமுறை கூடுதலாக மக்கள் மயப்படுத்தியிருக்கிறது. வானொலியில் பின்பற்றப்பட்டு வந்த இறுக்கத்தன்மையான பல விசயங்களை விட்டு அதனை நெகிழ்ச்சிக்குரியதாக்கிஙிருக்கிறார்கள்.



முன்னர் வானொலி ஒரு அதிகார மையத்திலிருந்து ஒலிப்பதான உணர்வே இருந்தது. அரச ஊடகமாக அது இருந்தது இதற்கான முக்கிய கரணமாக இருக்கலாம். அதனால் அது அந்தத் தொனியைப் பேணியது. அத்துடன் ஒரு அரச வானொலிக்குரியவாறு பொறுப்புடன்கூடிய சீரியஸ் தன்மையையும் அது கொண்டிருக்க வேண்டியதாயிற்று. தாய் அல்லது தகப்பன் ஸ்தானத்திலிருந்து பேசவேண்டிய பொறுப்பு இது. ஆனால் தனியார் வானொலிகளின் வருகை இந்த நிலையைமுற்றாக மாற்றி விட்டது. தனியார் மயத்தின் விரிவாக்கம் எல்லாத்துறைகளிலும் ஏற்படுத்திய அதிர்வுகளும் மாற்றங்களும் வானொலியிலும் நிகழ்ந்தது. அறிவுறுத்தும் நிலை, உரையாற்றும் நிலை, கட்டளையிடும் தன்மை, தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற மாதிரியான மேல் கீழ் நிலை என்பனவற்றை முற்றாக நிராகரித்தன புதிய வானொலி முறைமைகள்.



புதிய முறைமைகளில் கேட்போருடன் நேரடியாக பேசுவதான உணர்முறையின் உருவாக்கம் நிகழ்ந்தது. அத்துடன் கேட்போரும் வானொலியில் நேரடியாகப் பங்கேற்றனர். தொலைபேசியூடான இந்தப் பங்கேற்பு வானொலியில் நிகழ்ந்த முக்கியமான மாற்றமே. வானொலி மக்கள் மயப்பட்டதுடன் அது ஜனநாயகப்பட்டதும் இங்கே ஏற்பட்டது. சில வானொhலிகள் இதனைச் சரியாகப்பேணுகின்றன. வேறுபலவோ இதனை மலினப்படுத்;தி சீரழிப்;பதையும் காணமுடிகிறது.



வெகுஜன ஊடகம் என்ற வகையில் அதிக பொறுப்பை கட்டாயம் பேணவேண்டிய கடமை வானொலிகளுக்குண்;டு. அதற்காக அவை இறுகிப்போயிருக்க வேண்டுமென்றில்லையே. அதேவேளை நேரத்தைக் கழிப்பதற்காக மட்டும் இயங்கவும் முடியாது. அநேக தமிழ் வானொலிகள் இப்போது தமிழகச்சினிமாவின் பாடல்களை ஆதாரமாகக்கொண்டே தமது ஒலிபரபபுச்சேவையை நடத்துகின்றன. தவிரவும் அதே சினிமாவில் கையாளப்படுகின்ற மலினமான உத்திகளையும் பேச்சு மொழியையும் பேசுமுறையையும் பின்பற்றுகின்றன.



வாய்த்த ஒரு புதிய முறைமையை மேல்நிலையில் விரிவாக்கம் செய்வதற்குப்பதிலாக அதனைத்தவறாகப்பயன்படுத்தி பெறுமதியற்றதாக ஆக்கும் காரியங்களே தொடர்கின்றன. ஜனநாயகத்தைப் பாழாக்கும் எதிர் நடவடிக்கை இது.


ஐ.பி.சி யில் இந்தமாதிரியான பிரச்சினையை நாம் காணவில்லை. எங்களுக்கு கிடைத்த அரைமணிநேர ஒலிபரப்பைக்கொண்டே இவ்வாறு கூறுகிறேன். ஐ.பி.சி யின் செய்திச்சேவை இதில் முக்கியமானது. தாயகத்தின் செய்திகள் இதில் விரிவாகச் சொல்லப்படுகின்றன. இதன்மூலம் புலத்திலும் தமிழகத்திலும் தாயகச்செய்திகள் அறியப்படக்கூடிய ஒரு வெளிப்பாட்டுத்தளம் நிpர்மாணிக்கப்பட்;டது. செய்தி அளிக்கையிலும் விரிவு, ஆழம், நேர்த்தி என்பனவுண்டு. தாசீஸிஸியஸ் இதற்கு முன்னோடியாக இருந்தார். அவர் முன்னர் பி.பி.ஸி யில் பெற்றிருந்த அனுபவம் இதற்குக் கைகொடுத்திருந்தது.

இப்போது புலத்தில் நிறைய வானொலிச்சேவைகளிருக்கின்றன. கனடா, ஒஸ்ரேலியா, பிரான்ஸ், லண்டன் எனப்பல இடங்களில் இருந்தும் பல ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன. இதில் சில இணையத்திலும் ஒலிக்கின்றன. ஆனால் ஐ.பி.சி பெற்றிருக்கிற நெருக்கத்தையும் முக்கியத்துவத்தையும் இன்னும் பிற வானொலிகள் பெறவில்லை.



தமிழருக்கென்று ஒரு வானொலி இல்லாதிருந்த காலம் மாறி இப்போது தமிpழருக்கே அதிகமான வானொலிகள் என்றாகிவிட்டது.

No comments: