Friday, June 15, 2007

அறம் அவரவர் சார்ந்தது



அமெரிக்காவைக் கண்டுபிடித்தது ஷகொலம்பஸ் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. எழுதப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகளும் அப்படித்தான் சொல்லுகின்றன. ஆனால், இன்றைய மறுசிந்தனை இந்த வரலாற்றுப் புனைவின் மீது கேள்விகளை எழுப்புகிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அமெரிக்கா இருக்கவில்லையா? அல்லது அப்படி அமெரிக்கா இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் போன்ற பல கேள்விகள் வரலாற்றுப் புனைவுகளின் மீது எழுப்பப்படும்போது அறியப்பட்ட வரலாற்றின் பொய் முகமும் குரூரமும் வெளிப்படுகிறது.
.
அநேகமாக அறியப்பட்ட எல்லா வரலாற்றுக்கும் மறுபக்கம் அல்லது வேறுமுகங்கள் இருக்கின்றன.

கொலம்பஸ் அமெரிக்காவில் கால்வைத்தபோது அங்கிருந்து பூர்வகுடிகளைக் கணக்கற்ற விதத்தில் கொன்று குவித்தார். அப்படி அந்தப் பூர்வீகக் குடிகளைக் கொன்று, வெற்றி கொண்டுதான் அமெரிக்காவில் கொலம்பஸ் தன்னை நிலை நிறுத்தினார்.

மேற்குலகின் பார்வையிலும், அறிவிலும் கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார். அமெரிக்காவுக்கு ஒளியூட்டினார். அதனைத் துலங்கச் செய்தார் என்ற மனப்பதி வுதான் இருக்கிறது. இதனால், அவர்கள் கொலம்பஸை முதன்மை அடையாளமாகவும் வரலாற்றின் நாயகனாகவும் கொண்டாடுகின்றனர்.

கொலம்பஸ் கொன்று குவித்த அமெரிக்கப் பூர்வ குடிகளைப் பற்றிய கணக்கெடுப்புக்களோ மதிப்பீடோ மனப்பதிவோ மேற்கில் இல்லை. அது குறித்த வருத்தமோ தயக்கமோகூட அவர்களுக்கில்லை. குறிப்பாக, மேற்காதிக்கச் சிந்தனையில் இல்லை.

இந்தியாவில் 1948 சனவரி 30 அன்று காந்தி கோட்சேயினால் சுட்டுக் கொல்லப் படுகிறார். காந்தியைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக 1948 ஓகஸ்ற் 11 அன்று கோட்சே நீதிமன்றத்தில் தன்னுடைய விரிவான வாக்குமூலத்தை அளிக்கின்றார். அப்போது இந்த வாக்கு மூலம் தடை செய்யப்பட்டு பின்னர் மொராஜி தேசாய் ஆட்சியிலிருந்த போது வெளியிடப்படுகிறது.

காந்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் மீது கொண்ட அக்கறை யினாலேயே என்று கோட்சே சொல்கிறார். அதற்கு ஆதாரமாக சீக்கிய, இந்து அகதிகள் காந்தியின் உண்ணாவிரதத்தினால் மசூதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதும் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாவை இந்தியா கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும் பாகிஸ்தானைப் பிரிப்பதற்கு காந்தியே முக்கிய காரணமாக இருந்தார் என்றும் கோட்சே தெரிவித்தார்.

காந்தியின் கோணத்திலிருந்து அணுகுவோர் பெரும்பான்மையான இந்துக்கள் முஸ்லிம் களின் மீது பரிவுடன் நடந்து கொள்வார்கள், பெருந்தன்மையுடன் இணைந்து வாழ்வார்கள் என்று காந்தி நினைத்தார் என்கின்றனர்.

இங்கே பெருந்தன்மை பற்றியோ பரிவுபற்றியோ பேசுவதைவிட அவரவர்க்கான உரிமை கள் பற்றியே பேசவேண்டும். அதுவே அவசியமானது என்கின்றனர் காந்தியை மறுஆய்வுக்குட்படுத்தும் இன்னொரு சாரார். முஸ்லிம்களுக்குரிய உரிமை இந்துக்களுக்கான உரிமை என்பவை தனித்தனியாக வரையறுக்கப்பட வேண்டுமேயொழிய வெறுமனே பரிவும் இரக்கமும் மட்டுமல்ல என்கின்றனர் அவர்கள்.

இவை ஒவ்வொன்று தொடர்பாகவும் வௌ;வேறு கோணங்களிலான பார்வைகள் உண்டு. இந்த நிகழ்ச்சிகள் குறித்து இந்தியாவில் படிக்கப்படும் வரலாறும், பாகிஸ்தானில் படிக்கப்படும் வரலாறும், பிரிட்டனில் படிக்கப்படும் வரலாறும் வௌ;வேறாகவே இருக்கும் என்கிறார் சுரே~; குமார இந்திரஜித்.
ஒரு இடத்திற்குப் பல வரைபடங்களும் ஒரு காலத்துக்குப் பல சரித்திரங்களும் உண்டென்றும் அவர் மேலும் சொல்கிறார்.

மாற்றுச் சிந்தனையாளர்கள் வரலாற்றை மறுவாசிப்புச் செய்கின்றனர். இன்றைய அறிவுலகம் பன்முகத்தன்மையை அதிகம் நம்புகிறது. பன்முகத் தன்மையில் உருவாகுகின்ற பரிமாணங்களும் வலுவும் அதிகம் என்ற உண்மையை அது நிரூபிக்கிறது

அமெரிக்காவில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த குறிப்புக்களோ அந்தக் கொலைகள் குறித்த குற்றவுணர்ச்சியோ இன்றும் மேற்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது மேற்கின் பன்முகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கொடுமையின் ஆறாதகாயங்களை தமிழில் மறுவாசிப்புச் செய்திருந்தார் எஸ். வி. ராஜதுரை. 1995இல் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுபமங்களா இதழில் எஸ்.வி.ஆர். இது பற்றி இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார். கொலம்பஸின் குரூரமுகத்தை; அதில் அவர் தெளிவாகக் காட்டினார்.. கூடவே மேற்குலகின் நாகரிகத்தையும்.

இதேபோல ச. தமிழ்ச்செல்வன் சுமங்களாவில் வேறொரு கட்டுரை எழுதியிருந்தார்.


உருண்டையான உலகத்தில் எப்படிக் கிழக்கும் மேற்கும் என்ற பிரிப்புக்கள் செய் யப்பட்டன? எந்த நோக்கத்திலும் எந்தத் தேவையின் அடிப்படையிலும் இந்தப் பிரிப்புகளும் பூமியின் ரேகைக்கோடுகளின் வரைபும் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

நமது கல்வி முறையையும், மனப்பதிவுகளையும் பிளந்தெறியும் விதமாக தமிழ்ச் செல்வன் பல உண்மைகளை எடுத்து வெளியே வைக்கிறார்.

ஐரோப்பியர்களின் மேலாதிக்கமே இந்த வரைபுகளை நிர்ணயம் செய்தன. அதிலும் பிரித்தானிய எழுச்சியும் அதன் விரிவாக்கமும் இந்தத் தேவைகளை உருவாக்கின. இந்த எழுச்சியோடிணைந்து எழுந்த அறிவுவாதம் புதிய நிர்மாண விரிவாக்கத்திற்கு ஏற்ற மாதிரித் தன்னை நெகிழ்ந்து கொடுத்து இந்த நிர்ணயங்களைச் செய்தன.


ஐரோப்பா ஒரு காலம் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் சிந்தித்தது என்பதே இதன் சாரம். வரலாறு என்பது குரூரமானது என்று சொல்வதன் உண்மை ஒரு வகையில் சரிதான். அது எத்தனைதான் படிப்பினைகளைத்தந்தாலும் மீண்டும் மீண்டும் குருரங்கள் நிகழ்வதற்கான நிலைமைதானே மிஞ்சிக்கிடக்கிறது.


இப்போது ஈராக்கில் தினமும் கொலைகள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. கட்டற்ற வகையில் அழிவுகள் தொடர்கின்றன. இன்றைய ஈராக் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளும் அறிவிப்புகளும் எப்படி இருக்கின்றன என்பது சகலருக்கும் தெரிந்தது. அதேவேளை, ஈராக்கியர்களின் மனப்பதிவும் விருப்புகளும் எப்படி என்பதும் தெரிந்ததே. குறிப்பாக, ஈராக்கிலுள்ள ஸியா முஸ்லிம்களின் மனப்பதிவு வேறானது. சுனி முஸ்லிம்களின் பதிவு வேறானது. ஈராக்கிய அரசு மற்றும் போராட்டக் குழுக்களின் பதிவுகளும் நோக்கங்களும் வேறுவேறானவை. அங்குள்ள மக்களின் மனப்பதிவுகளும் வேறானவை.

இப்போது ஈராக்கின் வரலாறு என்பது அவரவர் நோக்கு, மனப்பதிவு, தேவைகளின் அடிப்படையில் வௌ;வேறாக எழுதப்பட வேண்டும். அப்படித்தான் எழுதவும்படுகிறது. இதில் சில இப்போது முன்னாதிக்கம் செலுத்தலாம். சிலவோ இப்போது பின்தங்கியிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் ஒருபோது மீண்டு மேலெழுந்து வரும்.
ஒற்றைப்படையான வரைபுகள் தகர்ந்துவரும் யுகம் இதுவென்பதை இந்த விடயங்கள் அனுபவமாக்குகின்றன.

வரலாறு என்பது அதிகாரத்தினால் கட்டமைக்கப்படுகிறது என்று சொல்வோர் உண்டு. அது அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தினால் அல்லது கலகத்தினால் உருவாக்கப்படுவது என்று குறிப்பிடுவோரும் உண்டு. வரலாறு என்பது வாழும் முறையால் உருவாகுவது என்று வாதிடுவோரும் உண்டு. வரலாற்றை அறிவே நிர்மாணிக்கிறது என்று நிரூபணம் செய்வோர்களும் இருக்கின்றார்கள்.

அதிகாரத்தினால் நிர்மாணிக்கப்படும் வரலாற்றின் கீழே குருதியும், நிணமும் நாறிக்கிடக்கின்றன. அதற்குள் தீராத வலியும் அவமானமும் குரோதமும் தீராப்பழியாக கொதித்துக்கொண்டும் பெரிதாகிக் கொண்டுமே இருக்கின்றன.

ஆபிரிக்காவை வெற்றி கொண்ட வெள்ளையர்கள் ஆபி ரிக்காவின் வரலாற்றைப் புனைந் திருக்கிறார்கள். இதுதான் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் நடந்தது. ஆனால், அங்கெல்லாம் நூற்றாண்டுத் துயரமாய் நூற்றாண்டுகளாய் தொடரும் வன்மமாய் இன்றும் பழங்குடிகள், மற்றும் கறுப்பர்களிடையே கோபமும் துயரமும் கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றன. அவர்களுக்கான நீதியின்மைகள் தொடரும் வரையில் வெள்ளையர்கள் தங்களின் நாகரிகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனைதான் வெள்ளை சனநாயகம் அழகாகப் பேசினாலும் அது ஆதிக்க வெளிப்பாடாகவோ அல்லது நாகரிகப் பொய்மையாகவோதான் இருக்கிறது.

அறத்தின் தளத்தில் கட்டமைக்கப்படுகின்ற மனப்பாங்கு, நீதி, நாகரிகம், வரலாறு குறித்த சிந்தனைகள் வலுவடைந்து வரும் சூழலில் அதன் தீவிரத்தை மழுங்கச் செய்வனவாகவே இன்றைய பொதுஅமைப்புக்களின் விரிவாக்கத்தை மேற்குலகம் செய்து வருகின்றது என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் எது அறம் என்ற வாதங்களும் உண்டு. அவரவர் தத்தமது நிலைப்பாடு களிலிருந்து தமக்கான அறத்தை உருவாக்குகிறார்கள். இன்னும் சரியாகச் சொன்னால், தமது நியாயங்களுக்கு ஒரு அறக்கோட்பாட்டை உருவாக்குகின்றனர்.

ஈராக்கில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்பது அமெரிக்காவின் அறம். அமெரிக்கா வைத் துரத்துவோம் என்பது ஈராக்கிலுள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களின் அறம். வெளியே இருந்து நோக்கும் ஒருவர் இந்த இரண்டிலும் எதை மெய்யான அறம் என்று கொள்வது?

இங்கே விரிந்த அறிவு தேவைப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவைக் கட்டமைப்பதே பல சந்தர்ப்பங்களிலும் அதிகாரமையங்களாக இருக்கின்றன.

இலங்கை வரலாற்றில் சிங்கள மேலாதிக்க சிந்தனை உருவாக்கி வைத்திருக்கும் அறிவு, மேற்குலகம் தனது சந்தைப் பொருளாதாரத்துக்கமைவாக உருவாக்கிவரும் அறிவு என்பவற்றை இங்கே கவனிக்கலாம்.

பாடசாலைக் கல்வி தொடக்கம் ஊடகங்கள் மற்றும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகள் வரையில் இந்த மேலாதிக்க அறிவு விரிவாக்கம் நடைபெறுகிறது.

ஆகவே, இதன் வழி நின்றே இவ்வாறான வரலாற்றுப்புனைவுகளின் மீது நின்றே அறத்தையும் அதாவது, மேலாதிக்க சக்திகளின் நியாயத்தையும் உலகம் ஏற்க வேண்டியுள்ளது.

இது மிகக் கொடுமையானது?

நேரடியான ஒடுக்குமுறையையும்விட மிகப்பயங்கரமானதும் ஆபத்தானதும் இந்த அறிவு மயமாதலும் இந்த அறமயமாதலும் என்று எச்சரிக்கை செய்கின்றனர் விடுதலைக்கான சிந்தனையாளர்கள்.

விடுதலைக்கான அறத்தை ஒடுக்குமுறை யின் அறம் ஒருபோதுமே அங்கீகரிப்பதில்லை.

வரலாறு எப்படி அவரவர் நோக்கு, நலன் சார்ந்திருக்கிறதோ அவ்வாறுதான் அறப் பார்வையும் இருக்கிறது.

இங்கே துயரமென்னவென்றால் எல்லா நோக்கு நிலைகளாலும் பல சந்தர்ப்பங்களிலும் வீழ்ச்சியடைவது வாழ்க்கைதான்.

வாழ்வை மேம்படுத்துவதற்காகவே உலகம் முழுவதும் எல்லாக் காரியங்களும் நடக்கின்றன என்று சொல்லப்படுகின்ற போதும் இதுவே மெய்யாய் நடக்கிறது.

விடுதலை வரலாறும் விடுதலைக்கான அறமும் அதற்கான வழியையே திறக்க முயற்சிக்கின்றன. விடுதலை வரலாற்றில் சாதாரண மனிதர்களின் உணர்வுகளும் பங்கேற்பும் இடம்பெறுவது இதில் முக்கியமான அம்சம். இதுவே ஏனைய வரலாற்றியல்புகளை விடவும் வேறுபட்டிருப்பதும் மதிப்புக்குரியதாக அமைவதுமாகும்.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களுடைய உணர்வுத் தளத்தி லிருந்தும் பிறக்கின்ற வரலாற்றுக்கும் அறத்துக்குமே ஏனைய வரலாற்றை விடவும் மதிப்பு அதிகமாகிறது.

இது மற்றெல்லாப் புனைவுகளைவிடவும் அதிகம் வெளிப்படையானது. தவிர ஏனையவை அதிகமதிகம் ஆபத்தாக இருக்கும்போது இது மட்டும்தான் அவற்றிலிருந்து விலகி வேறு மாதிரியாக இருக்கிறது.

ஆனால், இந்த சனங்களின் வரலாறு இலகுவில் எட்டிவிடக்கூடிய தல்ல. அது விடுதலைப் போராட்டச் சூழலைத் தவிர வேறெங்கும் சாத்தியமாவதுமில்லை.

எல்லாக் குறிவைப்புக்களில் இருந்தும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கு விடுதலையாளர்களுக்கே அதிகம் உண்டு. அதிக சவாலையும் அதிகவிழிப்பையும் விடுதலையாளர்களே கொண்டிருக்க வேண்டியது யதார்த்தத்தின் நியதி.

No comments: