Friday, November 2, 2012


இந்தியாவின் கைகள் கத்தியும் பூச்செண்டும்



-     கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

இலங்கை அரசியல் மிகவும் கொந்தளிப்பான ஒரு நிலைக்கு மீண்டும் வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல், அதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் பற்றிய குற்றச்சாட்டுகள், இப்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின்; கைது, இந்தக் கைதுக்கு எதிரான ஆர்;ப்பாட்டங்கள் என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்ச்சிகள்@ பரபரப்பான செய்திகள்.

யுத்தம் முடிந்தாலும் நாடு அமைதிக்கோ வழமைக்கோ திரும்பவில்லை. ஜனநாயகத்;தைச் சுற்றி ஆயிரக்கணக்கான கேள்விக்குறிகளே நிற்கின்றன. ஒரு மாதத்துக்;குள் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தகவல் இல்லாத நிலை. இன்னொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகள், கண்டனங்களோடு தெருவில் இறங்கியிருக்கிறார்கள் சனங்களும் ஊடகவியலாளர்களும்.

வடக்கு கிழக்கிலிருந்த கொந்தளிப்பான நிலைமையும் பரபரப்புகளும் இப்போது தெற்குக்கும் மேற்குக்குமாக நகர்ந்திருக்கிறது. இது இப்படி இன்னும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் தெற்கிலும் மேற்கிலும் நீடிக்கக் கூடும். இந்தக் காலஎல்லை சிலவேளை கூடிக்குறையலாம். ஆனால், இந்த நிகழ்ச்சிப் போக்கில் மாற்றமிருக்காது. இதேவேளை இந்தக் கொந்தளிப்புப் பின்னர் மீண்டும் வடக்கு கிழக்குப் பகுதிக்கு மாறும். ஏனெனில் என்னதான் முயன்றாலும் தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினைகள் இப்போதைக்குத் தீர்;க்கப்படப்போவதில்லை. எனவே அங்கே பிரச்சினையின் தூண்கள் மேலும் பலமாகும். ஆகையால் வடக்குக் கிழக்கில் மீண்டும் கொந்தளிப்புகள் ஏற்படும். இதெல்லாம் இந்தப் பிராந்தியத்தினுடைய தொடர் நிகழ்ச்சியின் வெளிப்பாடாகும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் நிலைமையை அவதானிப்போருக்கு ஒரு அடிப்படையான விசயம் தெரியும். இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு பிராந்திய நாடான இந்தியாவும் சர்வதேச சமூகமும் அனுமதிக்கப் போவதில்லை என்பது. சுதந்திரம் கிடைத்த பின்வந்த கடந்த அறுபது ஆண்டுகளும் இலங்கை அமைதியில்லாமலே இருந்திருக்கிறது. இனியும் அது அப்படித்தான் இருக்கப் போகிறது. இதுதான் உண்மை. இப்போது நடந்து கொண்டிருக்கும் கொந்தளிப்புகளும் இனிமேல் தொடரப்போகின்ற கொந்தளிப்புகளும் மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு தொடர் நிகழ்ச்சியின் வெளிப்பாடுகளே. அது இந்திய பிராந்திய ஆதிபத்தியத்தின் விருப்பு வெறுப்புகள், நலன்கள் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடுகளாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலிருந்து முதல் பத்தாண்டுகளுக்குள்ளேயே மிக மோசமான இனவன்முறைக்குள் சிக்கியது. சிக்கியது என்பதைவிட சிக்க வைக்கப்பட்டது என்பதே சரியானது. அதாவது முதற்பத்தாண்டுகளுக்குள்ளேயே இலங்கையின் ஸ்திரத்தன்மை ஆடத் தொடங்கிவிட்டது.

அன்றைய இருதுருவ அரசியலில் டி.எஸ். சேனநாயக்காவின் ஐ.தே.க மேற்குக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்தபோது இந்தியா அதற்கெதிரான பொறிமுறையை உருவாக்கியது. அதன் விளைவு இனமுரண்பாட்டின் உச்ச வடிவமாகியது. பின்னர் இலங்கைத் தீவை இனமுரண்பாட்டின் அடிப்படையில் அது மிகத் தந்திரோபாயமாக இன்றுவரையில் கையாண்டு வருகிறது.

அதேவேளை இனமுரண்பாட்டரசியலில் ஒரு தணிவு நிலை, அல்லது ஓய்வு நிலை வரும்போது தெற்கில் கிளர்ச்சிகள், போராட்டங்கள், மாற்று அரசியல் என்றவாறாக இந்தியா தன்னுடைய கையை நீட்டிக்கொண்டேயிருக்கும். இங்கே தேவைக்கேற்ப களமும் திசையும் மாற்றப் படுகிறதே தவிர பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும். பிரச்சினைகளைப் பராமரிப்பதே இந்த அரசியலின் முக்கிய நோக்கமும் உபாயமுமாகும்.

ஜே.வி.பியின் அரசியலில் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் இந்தியா அதற்கு ஆதரவளித்தையும் (ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.வி.பியின் இன்றைய தலைவர் சோமவன்ச அமரசிங்கவை இந்தியாதான் காப்பாற்றியிருந்தது) அதைப்போன்று தமிழ் அரசியலில் அது இன்னும் தன்னுடைய ஆதரவு – எதிர் என்ற இருவகை நிலைப்பாடுகளின் மூலம் தனக்கான சக்திகளையும் பொறிகளையும் வைத்திருப்பதையும் இங்கே மீட்டுப் பார்க்கலாம். (இன்னும் இந்திய ஆதரவுடன் தமிழ்ப் போராளி இயக்கத்தினரும் தமிழ் அரசியலாளர்களும் இந்தியாவின் ஆதரவில் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் இந்தியாவிலும் இருப்பதை அவதானிக்கலாம்).

எனவே இந்திய இராசதந்திரத்தின் விளைவாக, இந்த அறுபது ஆண்டுகளும் இலங்கைத் தீவு தொடர்ந்து வன்முறை, போராட்டங்கள், கிளர்ச்சிகள், இரத்தம் சிந்துதல்கள் என்ற கொந்தளிப்பான அரசியல் நிலைமைக்குள்தான் இருந்து வருகிறது. இலங்கை ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் போது அதனால் தனக்கேற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணம். இந்தியாவை விடவும் இலங்கை என்ன பெரிய சக்தி வாய்ந்த நாடா? என்று யாரும் கேட்கலாம். இங்கே இலங்கை பெரிய நாடா சிறிய நாடா என்பதல்லப் பிரச்சினை. இலங்கையின் கேந்திர முக்கியத்துவமே இங்கே கவனத்துக்குரியது. இந்தக் கேந்திர முக்கியத்துவமே எப்போதும் இலங்கைக்கு அபாயமாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. இந்தக் கேந்திர முக்கியத்துவம் ஏறக்குறைய மேற்காசியாவில் பலஸ்தீனத்துக்கு நிகரானது. எனவேதான் இரண்டு மையங்களிலும் பிராந்திய – சர்வதேச சக்திகளின் ஆதிக்கமும் நெருக்குவாரங்களும் அளவுக்கதிகமாக இருக்கின்றன.

இலங்கையின் கொந்தளிப்பான நிலைமைகளுக்கு அதிகமான காரணம் இந்தியாதான். இந்தியாவைப் பொறுத்தளவில், அது இலங்கையில் ஒருபோதும் எந்தப் பிரச்சினையும் தீர அனுமதிக்கப் போவதில்லை. இதற்கான காரணங்கள் பலவுண்டு. சந்தை வாய்ப்புத் தொடக்கம் புவியியல் நலன்வரையில் ஏராளம் அம்சங்கள் இதில் தங்கியிருக்கின்றன. இலங்கை பலமான ஒரு நிலைக்கு தன்னை ஸ்தாபித்துக் கொள்ளுமெனில், அது தன்னிச்சையாக, தனக்குப் பொருத்தமான – விருப்பத்துக்குரிய வெளிச் சக்திகளைத் தேர்ந்து கொள்ளும். இலங்கையின் கேந்தர முக்கியத்துவம் மேற்குக்கும் தேவையானது. சீனாவுக்கும் தேவையானது. என்பதால் இந்தப் போட்டியில் அது தன்னை விரைவாக பலமாக ஸ்தாபித்துக் கொள்ள அதிக வாய்ப்புண்டு. இது ஏறக்குறைய இஸ்ரேலுக்கு நிகரான ஒரு பாத்திரத்தை இலங்கை வகிப்பதாகி விடும்.

அரபுலகத்தின் மத்தியில் அடங்காத் திமிரோடு இஸ்ரேல் இருப்பதை இங்கே ஒரு தடவை நாம் நினைவிற்குக் கொண்டு வந்தால் இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆகவேதான், இலங்கை விவகாரத்தில் எப்போதும் மிக விழிப்பாக இந்தியா இருக்கிறது. இலங்கைக்கான தூதுவர்களை இந்தியா நியமிக்கும் போதே மற்ற இடங்களுக்கான தூதுவர்களை விடவும் கூடிய ஆற்றலாளர்களையும் முக்கியமானவர்களையும் கவனத்திற்கொள்வது வழமை. ஜே.என்.டிக்ஸிற் தொடக்கம் அலோத் பிரசாத் வரையில் இதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு சீனாவும் ஆபத்தான சக்தி. மேற்குலகமும் ஆபத்தானதே. இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகளின் நிமித்தம் அது இந்த நாடுகளுடன் ஒரு சமரசத் தன்மையைக் கடைப்பிடித்தாலும் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை இழப்பதற்கோ பிற சக்திகளுக்கு விட்டுக் கொடுப்பதற்கோ அது ஒரு போதும் விரும்பமாட்டாது. எனவேதான், ‘இந்தியாவை தமிழர்கள் கையாள்வதன் மூலம் தமிழ் மக்களின் நலனையும் பெறலாம். இந்திய நலனும் பாதுகாக்கப்படும்’ எனச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். (இது எவ்வளவுக்குச் சாத்தியமானது என்பது வேறு விசயம்).

இத்தகைய நிலைமைகளின் பின்னணியில், இலங்கையை கொந்தளிப்புக்குள்ளாக்கிப் பலவீனப்படுத்தித் தனது நிழலின் கீழ் வைத்திருக்க இந்தியா தொடர்ந்து முயல்கிறது. அது முடியாதபோது அது கொஞ்சம் கூடுதலான அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறது. ராஜீவ் காலத்தில் இந்தியா அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. அப்போது ஜே.ஆர் ஜெயவர்த்தனா முற்றுமுழுதாக மேற்குமயப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். நவீன இலங்கையின் வரலாற்றில் அந்தச் சந்தர்;ப்பமே ஆகக்கூடிய வெளிச் சக்தியின் அழுத்தத்தை இலங்கை பெற்றது. புலிகளுடனான இறுதிப்போரின்போது கூட அத்தகைய அழுத்தங்கள் இலங்கைக்கு நேரவில்லை. இந்தப் போரின்போது சிங்கள இராசதந்திரம் இந்தியாவைப் பகைமைக்குள்ளாக்காத ஒரு பொறியமைப்பைப் பின்பற்றியது. ராஜீவ் காலத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை சிங்கள இராசதந்திரம் மறக்கவேயில்லை. (இதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம);.

அதிகம் ஏன், இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர், ஐ.தே.க இந்தியாவை ஆதரிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இதில் ரணில் இன்னும் இந்தியாவுடன் நெருக்கமானவராகவே தன்னைக் காட்டிக்கொள்கிறார். அப்படிக் காட்டாமல் அவரால் இலங்கையில் அரசியல் நடத்தமுடியாது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா கூட இந்தியாவை அனுசரித்தே பேசிவந்தார் என்பதையும் வாசகர்கள் நினைவிற் கொள்ளலாம்.

இதனால்தான், இலங்கைத் தேசியத்தை வலியுறுத்துவோர், மாற்று அரசியல் குறித்துச் சிந்திப்போர் எல்லாம் இந்திய ஆதிக்கத்தையும் இந்தியாவின் இத்தகைய தலையீட்டு முயற்சிகளையும் கண்டிக்கின்றனர். ஆனால், என்னதான் இருந்தாலும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினரோ இப்போது இந்தியாவுடன் முரண்படாத ஒரு நெருக்க அரசியலைப் பின்பற்றுகின்றனர். இதனால், இந்தியாவை வேறு மார்க்கங்களில் திசை திருப்பவோ பதிலாக வேறு உபாயங்களைப் பற்றிச் சிந்திக்கவோ முடியாத நிலையிருக்கிறது.

தன்னுடைய திட்ட வரைபையும் மீறிப் புலிகளின் எழுச்சி அமைந்திருந்தபோது, இந்தியாவுடனான பகைமைச் சக்தியாக புலிகள் மாறியிருந்தபோது, அதை முறியடிப்பதற்காக நீண்டகாலம் பொறுத்திருந்தது இந்தியா. மிக நுட்பமாகக் காய்களை நகர்த்தி, இலங்கை அரசைப் பலப்படுத்தியே புலிகளைத் தோற்கடித்தது அது. தான் நேரடியாகக் களத்திலிறங்கும் போது அதன் விளைவுகள் தமிழகத்தில் எதிரொலித்து இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற உணர்ச்சிகரமான பகுதியைத் தீண்டாமல் இந்தக் காரியத்தை மிகக் கச்சிதமாக நடத்தி முடித்ததையும் இங்கே நாம் அவதானிக்கலாம்.

ஆக மொத்தத்தில், இந்தியாவின் ஆதிக்க நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இலங்கையின் நிகழ்ச்சிகள் அமைகின்றன. சரத் பொன்சேகா கைதின் பின்னணியிலும் இந்தியாவின் கரங்கள் இருக்கின்றன. அதை எதிர்க்கும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் கைகளிருக்கின்றன. இதுதான் இந்த உண்மையின் சுவாரஷ்யமான பகுதி. ‘பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடும்’ ஒரு வித உத்தி இது. ஆனால் ஒன்று, என்னதானிருந்தாலும் ஒரு போதும் இலங்கையில் ஆட்சியிலிருக்கும் அரசுக்கெதிராக ஒரு கிளர்ச்சிச் சக்தி தலை தூக்குவதற்கு – ஆட்சியைக் கைப்பற்றுமளவுக்குப் பலம் பெறுவதற்கு இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அது இந்தியாவுக்குப் பாதகமான நிலைமைகளை – தன்னால் கையாள முடியாத நிலைமையை - உருவாக்கிவிடும். அதாவது அப்படியான நிலை ஏற்படுமானால் அது தனது கையை மீறயதாகி விடும் என்று இந்தியாவுக்குத் தெரியும்.

எனவே, இலங்கையின் அரசைத் தோற்கடித்து விடாதவாறு ஒரு சமனிலையில் இந்தக் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் அரசியல் நெருக்கடிகளையும் அது ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். அந்த வகையில்தான் இப்போது தெற்கில் தொடங்கியிருக்கிறது கொந்தளிப்பும் நெருக்கடியும். இது சற்றுக் காலத்தின் பின்னர் வடக்குக் கிழக்குக்கு திசை மாறும். அதுவரை வடக்குக் கிழக்கு மக்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இங்கே சற்று விவேகமாக நடந்து கொண்டால் வருகின்ற நெருக்கடியில் பாதியைக்; குறைக்கலாம். அல்லது அவற்றிலிருந்து மீண்டு விடலாம். அல்லது அவற்றை விலக்கிவிடலாம். அவ்வளவுதான்.

இந்த அபாய அரசியலை, தீராத நெருக்கடி அரசியலை மாற்றவேண்டுமாயின் உள்ளரங்கில், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கான வழிகள் திறக்கப்படவேண்டும். ஆனால், இலங்கை அரசியலிலும் சமூகச் சூழலிலும் ஐக்கியத்துக்கான வழிகள் மூடப்பட்டேயிருக்கின்றன. இந்த ஐக்கியத்துக்கான வழிகள் திறக்கப்படாதவரையில் இலங்கையில் எந்தப் பெரும் பிரச்சினைகளையும் நம்மால் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால், நடைமுறையில், இனமுரணை வளர்க்கும் காரியங்கள்தானே நிகழ்கின்றன. இதில் எல்லாச் சமூகங்களின் அரசியல் தலைமைகளுக்கும் முக்கிய பங்குண்டு. அவற்றின் இருப்பே இந்த இனமுரண்பாட்டு அரசியலில்தான் இருக்கின்றன. எனவே கொந்தளிப்பும், நெருக்கடியும் நிம்மதியின்மையும் கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் இருந்தே தீரும்.

அதுமட்டுமல்ல, இந்த இனமுரண்பாட்டு அரசியலின் விளைவாக - இந்தியத் தலையீட்டரசியலின் விளைவாக - தனியே பொதுமக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இதில், அரசியல் தலைவர்கள் முதல் படைத்தளபதிகள், உயர்மட்ட அதிகாரிகள் வரையில் பலியாகிவருகின்றனர். பாதிக்கப்பட்டும் வருகின்றனர். புலிகளின் தோற்றத்துக்கு முன்னரே எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க கொல்லப்பட்டார். பின்னர் பல சிங்களத் தலைவர்கள், படைத்தளபதிகள் கொல்லப்பட்டனர். மட்டுமல்ல, அ. அமிர்தலிங்கம், அஷ்ரப் போன்ற சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் கொல்லப்பட்டமையையும் நாம் இந்தப் பின்புலத்தில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

12.02.2010

No comments: