Tuesday, June 5, 2007

கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும்

அடுத்த உலகக் கிண்ண ஆட்டம் தொடங்கப் போகிறது. கிறிக்கெற் ரசிகர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஒன்றாகக் குவித்துக் காத்திருக்கப் போகிறார்கள். அநேக தொலைக்காட்சிகள் உலகக் கிண்ண ஆட்டத்தை நேரடி ஒளிபரப்புச் செய்ய ஆயத்தமாகிவிட்டன. றேடியோக்கள் சும்மா இருக்குமா? அவையும் நேரடி வர்ணனைக்கு தயாராகிவிட்டன. ஏறக்குறைய ஒரு திருவிழா மாதிரி, கிறிக்கேற் - உலகக்கிண்ண ஆட்டம் நடத்தப்போகிறது. திருவிழா வென்றால் சாதாரண திருவிழாவல்ல மெகா திருவிழா.


இந்த உலகக்கிண்ணப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதிலேயே ஏகப்பட்ட போட்டிகள். எந்த அணி வெல்லும் என்பதிலேயே போட்டிகளும் எதிர்வுகூறுதல்களும் கூட தொடங்கிவிட்டன. ஒவ்வொரு அணிக்கென்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு அதிலும் ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் என்று ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ரசிகர்கள் வேறு இருக்கிறார்கள் அவர்களுடைய கனவுகளில் இந்த ஆட்ட கதாநாயகன்எவனோ அவனே கனவுலகின் பிதா.

உலகக்கிண்ண ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே தங்களின் நாளாந்த நடவடிக்கைகளை மாற்றி அமைக்கத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். விளம்பரநிறுவனங்கள் இந்த மெகா திருவிழாவிற்கு அனுசரணைப் பணிகளை ஆரம்பித்துவிட்டன. அவை றாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கின்றன என சுதேசிய பண்பாட்டை ஆதரிக்கின்றதொரு நண்பர் விமர்சிக்கிறார். அதில் உண்மை உண்டு. உண்மை உண்டு என்று சொல்வதைவிட அதுதான் உண்மை. இந்தக் கிறிக்கெற் இப்படிக்கோடிக்கணக்கான ரசிகர்களின் மண்டைக்குள் புகுந்து ஆட்சிநடத்தத் தொடங்கியது எப்படி?

இதைப்பற்றி இப்போது பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. பல்வேறு வகையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. யாரோ விளையாடுகிறார்கள் அதைப் பார்த்துவிட்டுப் போவதுதானே. அதைவிட்டுவிட்டு அதைப்பற்றி ஆயிரம் கேள்விகள் எதற்கு. ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் ஏன்? என்று சிலர் கேட்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கவேண்டியதுதானே என்பது அவர்களின் வாதம்.

அவர்கள் சொல்வதைப் போல கிறிக்கெட் ஒரு விளையாட்டு என்ற அளவில் அதனை நோக்கலாம.; அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது தனியொரு விளையாட்டாக இருந்தால் அப்படி நோக்கலாம. ஆதனை ஒரு விளையாட்டாக வைத்திருந்தால் இப்படிக் கேள்விகளும் விமர்சனங்களும் எழ வாய்ப்பில்லை.

ஆனால் இன்று கிறிக்கெற் அப்படியில்லையே. அதுமிகப்பெரிய சுறாவாக அல்லவா இருக்கின்றது. மிகப்பெரிய பயங்கரங்களின் விளைகிடங்காக அல்லவா அதனை பல நாடுகளும் கையாளுகின்றன. அதில்தான் பிரச்சனை அதனால்தான் இவ்வாறு பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுகின்றன.
சாதாரண மூளைக்கு உலகில் பலபிரச்சனைகள் பிரச்சனைகளாகப் படுவதில்லை. பெரியகாரணங்களாக தோன்றுவதுமில்லை. அதனால்தான் சாதாரண மூளைகளைத் தொடர்ந்தும் உற்பத்திசெய்வதில் அதிகாரவர்க்கம் பல நுட்பங்களைக் கையாளுகின்றது. இந்த நுட்பங்களில் சிக்குண்டு சாதாரண மனிதர்கள் சிதைந்துபோகின்றார்கள். இந்த நுட்பங்கள் உண்மையில் அதிகார அமைப்பின் பொறிகளே. இந்தப் பொறி சகலரின் வாழ்க்கையினையும் பலியெடுக்கின்றது.



கிறிக்கெற் விரும்பிகள் இந்த மாதிரியான கருத்துகளுடன் முரண்பட நேரிடலாம். அவர்களுக்கு இதெல்லாம் ஒருபொருட்டல்ல. உண்மையில் இன்றைய கிறிக்கெற் ரசிகன் மைதானத்தில் உருட்டப்படுகின்ற பந்துதான். அல்லது எறியப்படுகின்ற பந்துதான.; ஆட்டத்தின் அணிகள் கொண்டாடப்படும் அளவிற்கு பந்துகொண்டாடப்படுவதில்லை. ஆட்டத்தின் நாயகர்கள் புகழ்பெறுகின்ற அளவிற்கு பந்து ஒருபோதும் புகழடைவதில்லை. ஆனால் அந்தப் பந்தைவைத்துத்தான் ஆட்டமே நடக்கின்றது. அந்த பந்து மைதானத்தில் படாதபாடெல்லாம் படுகின்றது. ஆட்டக்காரர்களையெல்லாம் ஒருகணம் மறந்துவிட்டு அந்தப் பந்தைமட்டும் ஒரு ஐந்துநிமிடம் பாருங்கள். அது எவ்வளவு முக்கியமான பொருளாக அந்த மைதானத்தில் இருக்கின்றது என்பது புரியும்.



அவ்வளவு ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் தனியே ஒருபொருளாக அதுதான் சுழல்கிறது. அதுமட்டும்தான் மையப்பொருளாக நின்று இயங்குகின்றது. அதைமையமாக வைத்துத்தான் ஆட்டமே நடக்கின்றது. ஆனால் பந்திற்கு எந்த முதன்மையும் இல்லை. பல இலட்சம் ரசிகர்களின் மனதில் அந்தப் பந்திற்கு சிறு இடமும் இல்லை. பந்தைப் போலத்தான் கிறிக்கெற்ரின் ரசிகர்களும். மெகாத்திருவிழாவில் கண்டுகளிப்பவர்களாகவே ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றைய அரசியலில் "மெகா" என்ற வார்த்தை சாதாரண மனிதர்களை சல்லடையாக்குகின்றது.



மெகாபட்ஜட், மெகாத்தொடர்கள், மெகாவிளையாட்டு, மெகாநிகழ்ச்சிகள் எல்லாம் சாதாரண மனிதர்களின் மூளையில் மந்தப் புத்தியை நிரப்புகின்றன. மெகா என்றவார்த்தை கவர்ச்சியூட்டும் ஒரு அபாய வெடிகுண்டு



கிறிக்கெட் பிரித்தானியரின் விளையாட்டு. அதனை பிரித்தானியர்கள் தாம் ஆட்சிகொண்ட கொலனி நாடுகளில் பரப்பினார்கள். அப்படித்தான் அது இலங்கை, இந்தியா, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவி வேர்கொண்டது.



தனது ஆக்கிரமிக்குட்பட்ட நாடுகளில் அந்த விளையாட்டைப்பரப்பி அதனை ஒரு சர்வதேச விளையாட்டாக இன்று பிரித்தானியா காட்டுகின்றது. உண்மையில் வெள்ளையரின் மேலாதிக்கத்தின் இன்னொரு வெளிப்பாடு இது. ஆனால் இதனை அப்படியாரும் விளங்குவதில்லை. அப்படி ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒவ்வொருநாடடுக்கென்றும் சில விசேடமான விளையாட்டுக்கள் உண்டு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பான சுவையிருந்திருக்கின்றது..



கிளித்தட்டும் கிட்டிப்புள்ளும் விளையாடிய தமிழ்ச்சாதி இப்போது அப்படியொரு விளையாட்டை விளையாடியதற்காகவே வெட்கப்படுகின்றது. கிளித்தட்டு ஒரு சர்வதேச விளையாட்டா என்று என்னுடைய இளவயது நண்பர் ஒருவர் கேட்டு சண்டைக்கு வந்துவிட்டார். அவருக்கு அதுவொரு சிரிப்புக்கிடமான விடயம். கிளித்தட்டு எப்படி சர்வதேச விளையாட்டாக முடியும்? என்று அவர்கேட்கிறார். அவரைப்பொறுத்தவரையில் கிளித்தட்டு, கிட்டிப்புள்ளு, சடுகுடு, கபடி எல்லாம் வெட்கக்கேடான விளையாட்டுக்கள்.



கிறிக்கேற்றும் கால்பந்து, கரப்பந்தாட்டம் போன்றதுதான் ஆமறகுலகின் விளையாட்டுக்களதான சிறந்தவை. அவற்றுக்குத்தான் மதிப்புண்டு அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.



என்ன செய்வது? அந்த இளவயது நண்பரை என்ன சொல்லமுடியும்?



அவருக்கு ஒன்றை மட்டும்சொல்லாம். அவருடைய அப்பாவும் தாத்தாவும் அவரின் முன்னோர்களும் விளையாடியவை கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும், கபடியும், சிலம்புந்தான் இப்படித்தான் பிரித்தானியாவில் கிறிக்கேற்றும் ஜேரிமனியில் கால்பந்தும் விளையாடப்பட்டன. யப்பானிலும் சீனாவிலும் குங்பூவும் கராட்டியும் விளையாடுகிறார்கள். உலகின் பல இனக்குழுக்கள் தங்கள் விளையாட்டுக்களை இன்றும் கைவிடாமல் தொடருகின்றார்கள்.



நாங்கள் யாரே எவரோ பிரித்தானியர்களுடைய விளையாட்டின் தாசர்களாகிவிட்டோம். அதற்காக அந்த விளையாட்டு தரமில்லை என்று அர்த்தமில்லை. அதைப் பார்க்கவோ ரசிக்கவோ கூடாது என்றும் இல்லை. அதுதான் உலகில் சிறந்த விளையாட்டு என்றும் அதற்கே பெரும் மதிப்பென்றும் கொள்ள முடியாது என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.



உலகத்தில் சிறப்பானவை பலஉண்டு. கிறிக்கேற்தான் சிறப்பு. அதனைத்தான் நாங்களும் ஏந்தவேண்டும் என்றால் எங்களை விடவும் வெள்ளையர்தான் சிறப்பானவர்கள். அவர்களைத் தான் நாங்கள் பெரிய ஆட்களாக ஏற்கவேண்டும் என்றுதான் முடியும். அதற்கு நாம் தயாரா? இன்றைய உலகில் எல்லோரும் மனிதர். எல்லோருக்கும் உரிமைகள் உண்டு என்று உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அது நடமுறைசார்ந்த பல பிரச்சனைகளுக்கு உட்பட்டாலும் அதுதான் உண்மை.



எனவே கிளிதட்டும் ஒரு சர்வதேச முக்கியத்துவம் பெறக்கூடிய விளையாட்டுத்தான் எட்டுக்கோடித் தமிழர்களின் விளையாட்டுக்கள் ஏன் சர்வதேச சமூகத்திற்கு வரமுடியாது. கிறிக்கெற் மட்டும் உலகத்தில் உள்ள அனைவரும் கொண்டாடப்படுகின்ற விளையாட்டா? இல்லையே.



அமெரிக்கா, கனடா, சீனா, யப்பான், இத்தாலி, ரஸ்சியா, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், ஜேர்மனி, சவுதி, ஈராக், ஈரான், கியூபா, காங்கேரி, போலந்து எனப் பல முக்கிய நாடுகளில் விளையாடப்படாத முக்கியத்துவம் பெறாத விளையாட்டுத்தானே இது?



இதெல்லாம் கிறிக்கெற்றுக்கு எதிரான வாதமல்ல. நமது மாயைகுறித்த ஒரு சிறு குறிப்பே.



கிட்டிப்புள்ளை தமிழீழத்தில் இப்போது பரவலாக விளையாடத்தொடங்கியுள்ளார்கள். அதற்கான விதிமுறைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. கிளித்தட்டும் அப்படித்தான்

குறிப்பு இது உலக கிண்ணத்தை ஒட்டி எழுதப்பட்டிருந்தாலும் தாமதமாக இங்கே வலைப்பதிவு செய்யப்படுகிறது வாசகர்கள் மன்னிக்க

No comments: